Saturday, August 22, 2009

பொக்கிஷம் – திரைவிமர்சனம்

தபால், தந்தி மற்றும் தொலைப்பேசி துறைகள் இப்படத்திற்கு நன்றி சொல்லியாக வேண்டும். 1970ல் இருந்த தகவல் பரிமாற்றத்துக்கும், இப்போது உள்ள தகவல் பரிமாற்றத்துக்கும் இடைவெளியை நம்மால் யோசிக்க முடியாது. ஆனால் அதை இப்படம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. அதே போல் அப்போது இருந்து உள்ள, கொல்கத்தாவை திரையில் காண முடிகிறது.

சேரனும், பத்ம ப்ரியாயும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்து எண்ணங்களை பரிமாறிக் கொள்கின்றனர். பிரிந்த பின்பும் அந்த நட்பு கடிதம் வழியாக தொடர்கிறது. பின்பு காதலாக மாறுகிறது. அந்த காதலுக்கு மதம் காரணமாக பத்ம ப்ரியா பிரிந்து விடுகிறார். அதே போல் சேரனும் அவரது தந்தையின் காரணமாக வேறு ஒரு திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் அவரது காதல் கடிதம் தொடர்கிறது, பத்ம ப்ரியாக்கு போய் சேராமல். அதாவது கடிதம் மட்டும் எழுதி வைத்துக் கொள்கிறார். காலங்கள் செல்ல, சேரனும் இல்லாமல் போக, அக்கடிதம் மட்டும் அவரது மகன் கையில் கிடைக்கிறது. மகன் தற்போது உள்ள தகவல் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி கடைசியா பத்ம ப்ரியாவை கண்டுப் பிடித்து அக்கடிதத்தை சேர்கிறார். ஆனால் பத்ம ப்ரியா அந்த மடலுக்குக்காக, தன் வாழ்க்கை அர்பணித்து உள்ளார் என்பது தெரிய வரும். அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் தன் காதல் மடலுக்குக்காக காத்துக் கொண்டு இருந்திருப்பார். சேரனின் மகன் வழியாக அவர் உலகில் இல்லை என்று தெரிந்ததும், மடலுடன் உயிர் விடுகிறார்

நல்ல கதை என்றாலும், படம் முழுவதும் கடிதங்கள் எழுதபடுகின்றன மற்றும் வாசிக்கபடுகின்றன. எல்லா மடல்களும், வசனங்களும் கவிதையாகவே இருந்தது.அனைத்து தரப்பு மக்களையும் கொல்கின்றனர். படம் எப்போது முடியும் என்கின்ற நிலைக்கு வந்து விடுகிறோம். அதை விட முக்கியமா, சேரனின் நடிப்பு. அவர் நடிக்கவில்லை என்று யார் அழுதார்கள் என்று தெரியவில்ல. அவர் நடிப்பை பார்த்து நாம் தான் அழ வேண்டும். அவ்வளவு மோசம். அதிலும் அதிகமா நடித்து கொல்கிறார். 1970ல் இருந்த வாழ்க்கை முறையை கொண்டு வர அவர் பாடுபட்டு இருந்தாலும், அது பல விஷயத்தில் அடிப் பட்டு போகிறது. இது காதலர்க்கான படம் என்று இருந்தாலும் (தனியாக போய் உட்கார முடியாது), அவர்களையும் இவ்வளவு சோதிக்க கூடாது.

நானும், என் நண்பர்கள் சேர்ந்து இப்படத்திற்கு சென்றோம். இப்படத்தை பார்த்து அழ முடியாமல், சென்டிமென்ட் காட்சிகள் வரும் போது, கை தட்டி, "சூப்பர் அப்பு" என்று கூறி அதை நகைசுவை கட்சிகளாக மாற்றிவிட்டனர். நாங்கள் மட்டும் தான் செய்கிறோம் என்றால், திரை அரங்கமே அதை தான் செய்து கொண்டு இருந்தது. இதில் இருந்தே இப்படத்தைப் பற்றி அறியலாம்.

சேரன் இயக்குனரின் படைப்புகள் ஆன பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், மற்றும் தவமாய் தவமிருந்து காவியங்களை போன்று எதிர்ப் பார்த்து காத்து கொண்டு இருக்கும் அவரது ரசிகன் என்ற முறையில் இத்திரைவிமர்சனத்தை எழுதி இருக்கிறேன்.

No comments: