Monday, February 20, 2012

எஸ். என். லட்சுமி - அஞ்சலி


தமிழ் திரையுலத்தில் மறக்க மற்றும் அழிக்க முடியாத ஒரு குணசித்திர மற்றும் நகைசுவை பாட்டி நடிகை எஸ். என். லட்சுமி இன்று காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன்

இவரது இழப்பு, திரையுலத்திற்க்கு பெரிய இழப்பு இன்பத்தில் ஐயமில்லை




இவரின் நடிப்புக்கு  மிக சிறந்த உதாரணம்

Thursday, February 09, 2012

கிருஷ்ணா குமார் - திருமண வாழ்த்துக்கள்

நான் முதன் முதலில் அமெரிக்கா சென்று இறங்கிய போது, என்னை விமான நிலையத்தில் வந்து அழைத்து கொண்டு, அவர் வீட்டிற்கு கூட்டி சென்று, டாலர் தேசத்தில் முதல் நாளே இந்திய உணவு கிடைக்க செய்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு மேல், அனைவரும் சேர்ந்து தான் இருந்தோம். தான் உண்டு, தன் வேலை உண்டு என இல்லாமல், அனைத்து உதவிகளையும் செய்து, டாலர் தேசத்தை புரிந்து கொள்ள உதவியவர். என்ன தான் பல பிரச்சனைகள் அவருக்கு இருந்தாலும், அவரின் பொறுமை மற்றும் மன வலிமையை பார்த்து அசந்து போனது உண்டு. இவரின் மூலமாக எனக்கு நான் இருந்த இடத்தில் பல தமிழ் மக்களின் பழக்கம் ஏற்பட்டது. அதனால் தான் இவர் சென்ற பிறகும்ஓரளவு சமாளிக்கும் நிலைமை எனக்கு கிடைத்தது. ஒரு வருட பழக்கமே (இரயில் சிநேகம்) என்றாலும், இந்த மாதிரியான மனிதரை பார்ப்பது அபூர்வம். நான் பழகின சிநேகங்களை, தொடர்பு எல்லைக்குள் எப்போதுமே வைத்து இருக்கும் பழக்கம் இவருக்கும் பொருந்தும்.

அவருடைய திருமணம் இன்று கோவையில் நடைபெறுவதை தெரிவித்து கொண்டு, என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு இன்று நான் கோவையில்.

Wednesday, February 08, 2012

டெல்லி பெல்லி - திரைவிமர்சனம் – 2011 – Delhi Belly


 
இன்னுமும் தமிழில் அருவாள், மண்வாசனை, அம்மா/அப்ப/தங்கை பாசம் போன்ற படங்கள் மற்றும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை காட்டும் படமே எடுக்கபடுகிறது மற்றும் ஓட்டவும் படுகிறது. அதை மீறி படங்கள் எடுத்தால் கஷ்டம் தான். மக்களின் ரசனை அவ்வளவு தானா? அல்லது ரசனையை வெளிபடுத்த மறுக்க படுகிறதா அல்லது தமிழ் என்ற உணர்வின் காரணமா என்ற கேள்வி இன்னும் தமிழ் திரைஉலகத்தில் இருக்கிறது.  இதை அனைத்தையும் உடைத்து விட்டு, மக்களின் வேறு ரசனையை தட்டி எழுப்பிய படம் என்று இத்திரைப்படத்தை கூறலாம். வெறுமனே  ஜாலியான திரைக்கதை மற்றும் இளசுகளை கட்டி போடும் காட்சி மற்றும் வசன அமைப்புகள் வைத்து கொண்டு இரண்டு மணி நேரம் ஒரு திரைப்படம் என்றால் இது தான். அனைத்து காட்சிகளும் மற்றும் வசனங்களும் தமிழ் நாட்டை பொறுத்த வரை கெட்ட காட்சிகள் மற்றும் கெட்ட வார்த்தைகள் என்றால் யூகித்து கொள்ளுங்கள்.


இம்ரான்கான் ஒரு செய்திமைப்பாளர். அவரின் காதலி விமானத்தில் பணிபுரியும் ஒரு நங்கை. இம்ரான் உடன் குன்னால் மற்றும் அருப் தங்கி இருப்பார்கள். கள்ள கடத்தல் செய்யும் கும்பல், காதலி வழியாக ஒரு பார்சலை கொண்டு வந்து இருப்பார்கள். அவள் அந்த பார்சலை அனுப்புவதற்கு இம்ரானை கேட்க, இம்ரான் குன்னலை கேட்க, குன்னால் அருப்பை கேட்க, கடைசியில் பார்சல் மாறி சென்று விடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் காதல் என்ன ஆனது என்று எல்லா கேள்விகளுக்கும் முடிவில் பதில்.


இம்ரான் உடன் வேலை பார்க்கும் பூர்ணவின் மறுவாழ்க்கை, குன்னலின் குறுக்கு புத்தி, அருப்பின் காதல், கள்ள கடத்தல் கும்பல் என்று பல கிளைகள். இத்தனையும் இரண்டு மணி நேரத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள் அதுவும் தமிழ் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளுடன். உச்ச கட்டமாக, குன்னால் தன்னுடைய வீட்டு சொந்தகாரரை மிரட்ட, அவர் போட்டோ எடுக்க செல்லும் இடமும், காசு கொடுத்த பின் கை வைக்கும் இடமும், முடியல. அதே போல் இம்ரான் தன் காதலி உடன் இருக்கும் காட்சிகள் படத்தின் வரம்புக்கு உச்சகட்டம். அருப் தன் காதலில்லை பற்றி குறை சொல்வதாக காட்டும் காட்சிகள் வசனத்தின் வரம்பு. இதற்கு மேல் கெட்ட வார்த்தைகளுடன் எழுத முடியாது.  இதே போன்ற காட்சிகளை தமிழில் கற்பனை செய்ய முடியவில்லை.


வறச்சி இல்லாமல் கண்கள் முழுவதும் பல வண்ணங்கள். காரணம் அதற்கு காரணம் ஒளிபதிவாளர் ஜசோன். அருமையான காட்சி அமைப்புகள். பாடல்கள் தான் ஏனோ மனதில் நிற்க மறுக்கிறது. அதே போல் பின்னணி இசை சுமார் ரகம் தான். மொத்தத்தில் டெல்லி பெல்லி வயது வந்தவர்களுக்கு ஒரு அருமையான படம். தமிழில் இதே படத்தை எடுத்தால், கண்டிப்பாக மெகா ஹிட் தான்.

Tuesday, February 07, 2012

திருக்கடையூர் கோவில் - ஆறுபதாம் கல்யாணமா?


சென்ற பதிவில் நான் போட்ட திருக்கடையூர் கோவில் பதிவை பார்த்து என்னிடம் சில பேர் அக்கோவிலை பற்றியும், அதனுடைய சிறப்பு அம்சத்தை பற்றியும், அங்கு சென்று வந்தால் எவ்வளவு செலவு ஆகும் என்பதையும் கேட்கின்றனர். திருக்கடையூர் கோவிலை பற்றி உங்களுக்கு ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் வீட்டிற்கு பின்னால் இருந்த என் குல வம்சவழியினர், 75ம் வயது சிறப்பு கல்யாணத்தை செய்து கொண்டனர். அதனால் தான் அம்மாதிரியான கல்யாணத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டு, ஆராய தொடங்கினேன். எனக்கு தெரிந்த சென்னை, மதுரை மற்றும் திருச்சி மக்களிடம் நான் ஆறுபதாம் கல்யாணம் பற்றி கேட்டும் போது, இதே கோவிலை தவறான பெயருடன் சொன்னார்கள். நான் இக்கோவிலின் பெயரை சொன்ன உடன், ஆம் என்று சொன்னார்கள்.

நான் அந்த கோவிலுக்கு சொல்லும் பொழுது, அங்கு மூன்று கல்யாண நிகழ்ச்சிகளை காண முடிந்தது. பார்க்கும் போது எல்லாமே ஆறுபதாம் கல்யாணம் போல் தான் இருந்தது. ஆனால் எங்குமே கூட்டம். மூன்று அல்லது நான்கு பேருந்துகளை பார்க்க முடிந்தது. நான் பொது அறிவு வேண்டி, இந்த விழாவை பற்றி கேட்க, கோவில் அலுவலகம் சென்றேன். அவர்கள் போட்ட பட்டியல்.

கோவிலுக்கு கட்ட வேண்டிய பணம் - ~ ரூ.1526 . இரண்டு விதமான திருகல்யாணங்கள் உள்ளன. முதல் விழாவுக்கு ~ ரூ.4000 (இரண்டு மணி நேரம் பூஜை) மற்றும் இரண்டாம் விழாவுக்கு ~ ரூ.8500 (நான்கு மணி நேரம் பூஜை).  நம்முடைய பொருளாதார சூழ்நிலையை பொருத்து ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளலாம். அது போக, நாம் வாங்கி கொண்டு செல்ல வேண்டிய சில பொருட்களை பட்டியல் இட்டனர்.

இப்பதிவின் காரணத்திற்கு வருவோம். மேற்சொன்ன அனைத்து செலவுகள் செய்தால் கூட, சிறப்பாக விழா இருக்கும் என்பது சொல்ல முடியாது என்பது சில பேரின் கருத்து. இதற்கு காரணம் இக்கோவிலை பற்றி பல பேருக்கு தெரிந்து விட்டதால், கூட்டம் அலை மோதுகிறது. இதையே பயன்படுத்தி, புனிதமாக செய்ய வேண்டிய கல்யாணத்தை, வருமானம் வரும் தொழிலாக நினைத்து  செய்ய ஆரம்பித்து விட்டனர். நம்மிடம் எவ்வளவு பணத்தை பிடுங்கி செய்ய முடியுமோ, அவ்வளவு அவர்கள் பிடுங்க நினைப்பார்கள் என்று கேள்வி பட்டேன்.

இரண்டாவது காரணம், தென் தமிழ் நாட்டில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல ஆறு மணி நேரத்திற்கு மேல் ஆகி விடுகிறது. சென்னையில் இருந்தும் ஐந்து மணி நேரம் ஆகும் என்று நினைக்கிறேன். ஆறுபதாம் கல்யாணம் என்பதால், அனைத்து சொந்தங்களையும் அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். அதனால் பேருந்தை எடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை. புதன் கிழமை கல்யாணம் என்றால், செவ்வாய் மாலை பொழுதில் சிறு பூஜை நடத்த வேண்டி இருக்கும் மற்றும் புதன் கிழமை காலையில் விழா இருக்கும். இதன் காரணமாக செவ்வாய் கிழமை மதியமே அங்கு சென்று தங்கி விட வேண்டும். ஆக மொத்தம் அழைத்து சென்ற அனைவருக்கும் தங்க ஏற்பாடு, உணவு என்று பார்க்கும் போது, கண்ணை கட்ட ஆரம்பித்து விடுகிறது.

எனக்கு மனதில் இருந்த அனைத்து இக்கோவிலின் அனைத்து விஷயங்களையும் எழுதி விட்டேன். இப்பதிவில் இருக்கும் அனைத்து விஷயங்களும், நான் பார்த்து, கேட்டது மற்றும் என் கருத்து மட்டுமே. மீண்டும் கோவில் மற்றும் சில புனிதமான விஷயங்கள், பணத்திற்கு அடிமை ஆகி அதன் உண்மையான நிறத்தை இழந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக இதை கருதுகிறேன்.

Saturday, February 04, 2012

சமீபத்தில் பார்த்தது - ஆன்மிகம்



ஒரு பொருளோ/ கோவிலோ/ உறவோ, நம் அருகில் இருக்கும் போது அதனுடைய அருமை எப்போதும் தெரியவே தெரியாது. ஆனால் அதை விட்டு விட்டு பிரிந்த பின்னர் தான் அதனுடைய அருமை/பெருமை எல்லாம் புரியும். இது எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் இருக்கும் ஒரு குறை அல்லது பொது குற்றச்சாட்டு.

நான் அமெரிக்காவில் இருக்கும் போது, என்னை சுற்றி பல வடஇந்திய நண்பர்கள் இருந்தார்கள். குஜராத், ஒரிசா,  புனே, மும்பை மற்றும் பஞ்சாப் என்று பல மாநிலத்தார்.  சில பேர் இந்துத்துவ கொள்கை உடையவர்கள் குறிப்பாக குஜராத் மக்கள். அவர்கள்  உடன் பேசும் போது தான் வானவெளி கிரகங்களை வார்த்தை வந்தது. அதனின் தொடர்ச்சியாக நவக்கிரக கோவில்கள் பற்றி  பேச்சுகள் செல்லவே, நான் கேட்டு கொண்டு இருந்தேன். அப்போது கூட்டத்தில் இருக்கும் ஒரு நபர், தமிழ்நாடு கோவில்களை பற்றி பேச, எல்லோர் பார்வையும் என் மேல் விழுந்தது. நான் நவக்கிரக கோவில்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேனே தவிர,  நான் எந்த கோவிலுக்கு சென்றதில்லை. இந்த உண்மையை எல்லா மாநிலத்தார் முன்னால்  கூறவே மனம் வெட்க பட்டாலும், சபையில் ஒத்துக் கொண்டேன். அன்று இரவே ஓர் முடிவு. தமிழ் நாட்டிற்கு சென்ற உடன் கண்டிப்பாக இந்த நவக்கிரக கோவில்களை காண வேண்டும் என்று ஓர் உறுதி. அந்த முடிவுடன்  கோவில்களை பற்றி ஆராய தொடங்கினேன். இந்த கோவில்கள் உடன் பஞ்சபூத கோவில்களும் கருத்தில் எடுத்து கொண்டேன்.

எல்லா கோயில்களும்  கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை அருகில் இருந்து சுமார் 60 கி. மீ  தூரத்தில் வந்து விடுகிறது. சொல்ல போனால் இரண்டு நாட்களில் எல்லா நவக்கிரக திருத்தலங்களை கண்டு விடலாம்.

1.   நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி "
2.   சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்"
3.   முக்கண்ணனின், இடது கண்ணான " சந்திர பகவான் " அருளும் "திங்களூர்"
4.   புத்திர மற்றும் பொருள் காரகனான "குரு பகவான்" அருளும் " ஆலங்குடி"
5.   சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள " திருநாகேஸ்வரம்"
6.   கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள "திருவெண்காடு"
7.   சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் "சுக்கிரன்" குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"
8.   ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "
9.   பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்

நான் சென்னை வந்து நான்கு மாதங்களில் (இந்த ஒன்பது தலங்களில்) இரண்டு கோவிலுக்கு மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் யோசிக்காமல் செய்த மிக பெரிய வேலை, மதுரையில் இருந்து கார் எடுத்து சென்றது. மதுரை கார் டிரைவர்களுக்கு கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் பற்றி தெரியவாய்ப்பில்லை. அதனால் எங்கு சென்றாலும், கோவில் செல்லும் வழியை பற்றி கேட்டு கேட்டு செல்ல நேரம் ஆகி விடுகிறது. ஒரு காலை பொழுதில் மூன்று கோயிலை பார்க்க வேண்டிய நாங்கள் இரண்டை மட்டுமே பார்க்க முடிந்தது. 

அந்த இரண்டு தலங்கள்

கஞ்சனூர் (இணைய தளத்தின் உதவியுடன்)

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.

கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

இறைவன்: அக்னீச்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
விருட்சம்: புரச மரம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
பதிகம்: அப்பர்
நவக் கிரகத் தலம்: சுக்ரன்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப் படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது.


வைத்தீஸ்வரன் கோயில் (இணைய தளத்தின் உதவியுடன்)

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது. சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன் செவ்வாய், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு. இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

இந்த இரண்டு உடன் அதன் அருகில் இருந்த திருக்கடையூர் கோவிலுக்கு செல்லும் தருணம் கிடைத்தது.

திருக்கடையூர் (இணைய தளத்தின் உதவியுடன்)

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரர் மற்றும் அன்னை அபிராமி இருவரும் அருள் தருகின்றனர். இக்கோவிலின் சிறப்பே அறுவதாவது அல்லது எண்பதாவது திருமணம் செய்து கொள்ள சிறந்த இடம். நான் சென்ற போது இரண்டு திருமணங்களை பார்க்க முடிந்தது. 

·         சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.

·         59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.

·         70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக பல பேர் வருகின்றனர்.

என்னடா மூலவரை எங்கேயோ பார்த்த மாதிரியாக உள்ளதே மற்றும் பெயரும் மிக அருகிலே உள்ள பெயராக உள்ளதே என்று நினைத்து பார்க்கையில், என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோயில் மூலவர் தான். இது தான் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்பார்கள்.

பஞ்சபூத தலங்கள்

1.   நிலம் - காஞ்சிபுரம், திருவாரூர்தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி ஆலயத்திற்கு மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நல்ல தரிசனத்துடன். சென்னைக்கு அருகில் இருந்தும், அங்கு உள்ள மற்ற கோவில்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. நேரத்திற்காக காத்து இருக்கிறேன்.

2.   நீர் - திருவானைக்கா  - திருச்சி, தமிழ்நாடு
நான் செல்லாத ஒரே ஒரு தலம். நேரத்திற்காக காத்து இருக்கிறேன்.

3.   நெருப்பு - திருவண்ணாமலைதமிழ்நாடு
நான் நினைத்த பொழுது எல்லாம் செல்லும் தலம். என்னுடைய விருப்பமான தலத்தில் ஒன்று. எனக்கு விஷேசமான தலமும் கூட. காரணம் திருகார்த்திக்கை அன்று, தீடிர் என்று வி.ஐ.பிக்கான அழைப்பிதல் இலவசமாக கிடைத்து, இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்த தரிசனம் கிட்ட கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று கேள்வி பட்டு உள்ளேன்.

4.   வாயு - திருக்காளத்தி - ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
திருப்பதி நான்கு முறை சென்றால், அதனுடன் ஒரு முறை திருக்காளத்தியும் சென்று விடும் வாய்ப்பு கிடைத்து விடும். அதனால் இந்த தலத்தை பற்றி நான் யோசித்தது இல்லை.

5.   ஆகாயம் - சிதம்பரம்தமிழ்நாடு
ஒரு மாதத்திற்கு முன்னால் சென்ற தலம். அதுவும் மாலை பொழுதில், நடராஜரின் கதவை திறந்து, முதல் தீபம் காட்டும் போது அருகில் இருந்து தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தனை பெருமை மிக்க கோவில்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டை நினைத்து பெருமை படுகிறேன்.