Saturday, February 04, 2012

சமீபத்தில் பார்த்தது - ஆன்மிகம்



ஒரு பொருளோ/ கோவிலோ/ உறவோ, நம் அருகில் இருக்கும் போது அதனுடைய அருமை எப்போதும் தெரியவே தெரியாது. ஆனால் அதை விட்டு விட்டு பிரிந்த பின்னர் தான் அதனுடைய அருமை/பெருமை எல்லாம் புரியும். இது எனக்கு மட்டும் அல்ல, எல்லோருக்கும் இருக்கும் ஒரு குறை அல்லது பொது குற்றச்சாட்டு.

நான் அமெரிக்காவில் இருக்கும் போது, என்னை சுற்றி பல வடஇந்திய நண்பர்கள் இருந்தார்கள். குஜராத், ஒரிசா,  புனே, மும்பை மற்றும் பஞ்சாப் என்று பல மாநிலத்தார்.  சில பேர் இந்துத்துவ கொள்கை உடையவர்கள் குறிப்பாக குஜராத் மக்கள். அவர்கள்  உடன் பேசும் போது தான் வானவெளி கிரகங்களை வார்த்தை வந்தது. அதனின் தொடர்ச்சியாக நவக்கிரக கோவில்கள் பற்றி  பேச்சுகள் செல்லவே, நான் கேட்டு கொண்டு இருந்தேன். அப்போது கூட்டத்தில் இருக்கும் ஒரு நபர், தமிழ்நாடு கோவில்களை பற்றி பேச, எல்லோர் பார்வையும் என் மேல் விழுந்தது. நான் நவக்கிரக கோவில்களை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேனே தவிர,  நான் எந்த கோவிலுக்கு சென்றதில்லை. இந்த உண்மையை எல்லா மாநிலத்தார் முன்னால்  கூறவே மனம் வெட்க பட்டாலும், சபையில் ஒத்துக் கொண்டேன். அன்று இரவே ஓர் முடிவு. தமிழ் நாட்டிற்கு சென்ற உடன் கண்டிப்பாக இந்த நவக்கிரக கோவில்களை காண வேண்டும் என்று ஓர் உறுதி. அந்த முடிவுடன்  கோவில்களை பற்றி ஆராய தொடங்கினேன். இந்த கோவில்கள் உடன் பஞ்சபூத கோவில்களும் கருத்தில் எடுத்து கொண்டேன்.

எல்லா கோயில்களும்  கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை அருகில் இருந்து சுமார் 60 கி. மீ  தூரத்தில் வந்து விடுகிறது. சொல்ல போனால் இரண்டு நாட்களில் எல்லா நவக்கிரக திருத்தலங்களை கண்டு விடலாம்.

1.   நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி "
2.   சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்"
3.   முக்கண்ணனின், இடது கண்ணான " சந்திர பகவான் " அருளும் "திங்களூர்"
4.   புத்திர மற்றும் பொருள் காரகனான "குரு பகவான்" அருளும் " ஆலங்குடி"
5.   சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள " திருநாகேஸ்வரம்"
6.   கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள "திருவெண்காடு"
7.   சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் "சுக்கிரன்" குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"
8.   ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "
9.   பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்

நான் சென்னை வந்து நான்கு மாதங்களில் (இந்த ஒன்பது தலங்களில்) இரண்டு கோவிலுக்கு மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நான் யோசிக்காமல் செய்த மிக பெரிய வேலை, மதுரையில் இருந்து கார் எடுத்து சென்றது. மதுரை கார் டிரைவர்களுக்கு கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் பற்றி தெரியவாய்ப்பில்லை. அதனால் எங்கு சென்றாலும், கோவில் செல்லும் வழியை பற்றி கேட்டு கேட்டு செல்ல நேரம் ஆகி விடுகிறது. ஒரு காலை பொழுதில் மூன்று கோயிலை பார்க்க வேண்டிய நாங்கள் இரண்டை மட்டுமே பார்க்க முடிந்தது. 

அந்த இரண்டு தலங்கள்

கஞ்சனூர் (இணைய தளத்தின் உதவியுடன்)

கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும் சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ.தொலைவிலும் மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத் தலம் அமைந்துள்ளது.

கஞ்சமாற நாயனார் அவதரித்த தலமெனப்படுகிறது. பிரமனுக்குத் திருமணக் காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பலாச வனம் என்றும், அக்கினித்தலம் என்றும் பிரம்மபுரி என்றும் அழைக்கப் படுகிறது. சிவபெருமானே சுக்கிரனாகக் காட்சி அளிக்கிறார் என்பதால் சுக்கிரனுக்காக தனி சன்னிதி இல்லை.

இறைவன்: அக்னீச்வரர்
அம்பாள் : கற்பகாம்பாள்
விருட்சம்: புரச மரம்
தீர்த்தம்: அக்னி தீர்த்தம்
பதிகம்: அப்பர்
நவக் கிரகத் தலம்: சுக்ரன்

இக்கோயிலில் இருக்கும் முக்தி மண்டபம் என்றழைக்கப் படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன.சிவபெருமான், பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடிக் காட்சி அளித்த திருத்தலம் இது.


வைத்தீஸ்வரன் கோயில் (இணைய தளத்தின் உதவியுடன்)

வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது. சம்பாதி, சடாயு, என்ற கழுகரசர் இருவர்களும், தமிழ் கடவுளாம் முருகப்பெருமானும், பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாதலால் இப்பெயர் பெற்றது.

ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன் செவ்வாய், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது. திருநாவுக்கரசர் தீவிர வயிற்றுப்பிணியினால் அவதியுற்றபொழுது அவர் தமக்கையார் வைத்தியநாதனை நினைந்து பிணிநீக்க தொழுதிட்டார், அவ்வாறே எழுந்தருளி பிணிநீக்கினார். அன்று முதல் இத்தல சிவனாரை அவரின் பக்தகோடிகளால் வைத்தியநாதன் என்றழைக்கபெற்று வழிபடலாயினர்.

இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் ஏழுகடல் முனிவர்களும் (சப்தரிஷி) இத்தலம் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் (அய்தீகங்கள்) உண்டு. இத்தலம் இந்துக்களின் கடவுளாக கூறப்படும் இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்ன்னான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளாகி மாண்ட சடாயுவின் சடலத்தை இராமன் மற்றும் அவரின் தமையனாரான இலக்குவணன் இருவரும் இணைந்து (ஜடாயு) இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குந்தம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோயிலினுள் உள்ள சிறிய தலத்தில் கடவுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்..

கடவுளுக்கு படைத்த பொருட்காளாக (பிரசாதங்களாக) திருநீரும் , சாம்பல் (திருச்சந்தன உருண்டை (அ)திருச்சாந்து உருண்டை) நோய்தீர்க்கும் மருந்தாக வழங்கப்படுகின்றது. இது தீக்குழியிலிருந்து (ஒமகுண்டத்திலிருந்து) தயாரிக்கப்படுகின்றது. இன்னொரு வகையான மருந்தாக (சந்தன துகள்கள்) சந்தனம், குங்குமப்பூ கலந்து வழங்கப்படுகின்றது.
மக்கள் இங்கு வருகை புரியும் பொழுது மிளகு மற்றும் வெல்லத்துடன் கலந்த் உப்பு இவற்றை சித்தாமிர்தத்தில் (குளம்) வைத்து நோய்தீர்க்க வேண்டி கடவுளுக்கு படைக்கின்றனர். கடவுளுக்காக வெள்ளித்தட்டுகள், மோதிரங்களை காணிக்கையாக பிணிதீர்க்க வேண்டி உண்டியலில் செலுத்துகின்றனர்.

இந்த இரண்டு உடன் அதன் அருகில் இருந்த திருக்கடையூர் கோவிலுக்கு செல்லும் தருணம் கிடைத்தது.

திருக்கடையூர் (இணைய தளத்தின் உதவியுடன்)

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரர் மற்றும் அன்னை அபிராமி இருவரும் அருள் தருகின்றனர். இக்கோவிலின் சிறப்பே அறுவதாவது அல்லது எண்பதாவது திருமணம் செய்து கொள்ள சிறந்த இடம். நான் சென்ற போது இரண்டு திருமணங்களை பார்க்க முடிந்தது. 

·         சஷ்டியப்த பூர்த்தி, உக்ரரத சாந்தி, பீமரதசாந்தி, சதாபிசேகம், ஜன்ம நட்சத்திரம், ஆயுஷ்ய ஹோமம் ஆகியவை செய்வதற்கு மிகவும் புகழ்பெற்ற தலம் இது.

·         59 வயது முடிந்து 60 வயது தொடங்குகிறவர்கள் உக்ரரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள்.

·         70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது வயது பூர்த்தி ஆகி தமிழ் வருடம் தமிழ் மாதம் அன்று அவரவர் பிறந்த தேதி அன்று சஷ்டியப்தபூர்த்தி (மணிவிழா) செய்து கொள்வதற்காக பல பேர் வருகின்றனர்.

என்னடா மூலவரை எங்கேயோ பார்த்த மாதிரியாக உள்ளதே மற்றும் பெயரும் மிக அருகிலே உள்ள பெயராக உள்ளதே என்று நினைத்து பார்க்கையில், என் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஈஸ்வரன் கோயில் மூலவர் தான். இது தான் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்பார்கள்.

பஞ்சபூத தலங்கள்

1.   நிலம் - காஞ்சிபுரம், திருவாரூர்தமிழ்நாடு
காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி ஆலயத்திற்கு மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நல்ல தரிசனத்துடன். சென்னைக்கு அருகில் இருந்தும், அங்கு உள்ள மற்ற கோவில்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை. நேரத்திற்காக காத்து இருக்கிறேன்.

2.   நீர் - திருவானைக்கா  - திருச்சி, தமிழ்நாடு
நான் செல்லாத ஒரே ஒரு தலம். நேரத்திற்காக காத்து இருக்கிறேன்.

3.   நெருப்பு - திருவண்ணாமலைதமிழ்நாடு
நான் நினைத்த பொழுது எல்லாம் செல்லும் தலம். என்னுடைய விருப்பமான தலத்தில் ஒன்று. எனக்கு விஷேசமான தலமும் கூட. காரணம் திருகார்த்திக்கை அன்று, தீடிர் என்று வி.ஐ.பிக்கான அழைப்பிதல் இலவசமாக கிடைத்து, இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்த தரிசனம் கிட்ட கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று கேள்வி பட்டு உள்ளேன்.

4.   வாயு - திருக்காளத்தி - ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
திருப்பதி நான்கு முறை சென்றால், அதனுடன் ஒரு முறை திருக்காளத்தியும் சென்று விடும் வாய்ப்பு கிடைத்து விடும். அதனால் இந்த தலத்தை பற்றி நான் யோசித்தது இல்லை.

5.   ஆகாயம் - சிதம்பரம்தமிழ்நாடு
ஒரு மாதத்திற்கு முன்னால் சென்ற தலம். அதுவும் மாலை பொழுதில், நடராஜரின் கதவை திறந்து, முதல் தீபம் காட்டும் போது அருகில் இருந்து தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தனை பெருமை மிக்க கோவில்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டை நினைத்து பெருமை படுகிறேன்.

No comments: