Monday, February 09, 2009

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயில்

மதுரையில் உள்ள முக்கியக் கோவில்களில் இக்கோவிலும் ஒன்று. மதுரை மத்தியில் இக்கோவில் இருந்தாலும் ஒரே ஒருமுறை தான் சென்று உள்ளேன். இதோ அதன் சிறப்பு:

தல வரலாறு
மதுரையை ஆளும் மீனாட்சி ஆறுமாதமே பொறுப்பு வகிப்பாள். மாசி முதல் ஆவணி வரை அம்பிகை ஆள்வாள். திருமலை நாயக்கர் காலத்தில் மாசித்திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, சித்திரை முதல் ஆவணி வரை அம்பிகை பொறுப்பேற்று ஆட்சி செய்யும் வகையில் விழா மாற்றப்பட்டது. ஆவணி மூலத்தன்று மதுரையின் மன்னராக சுந்தரேஸ்வரர் பொறுப்பேற்பார். எச்செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம். எனவே, பட்டாபிஷேகத்திற்கு முன்பு சுந்தரேஸ்வரரே ஒரு லிங்கத்திற்கு பூஜை செய்வார். இவ்வாறு லிங்க பூஜை செய்த அமைப்பில் இங்கு சிவன் காட்சி தருகிறார். அதாவது சிலை வடிவில் மீனாட்சியுடன் இருக்கிறார். இவர்களுக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம். ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்' என்று அழைக்கப்படுகிறார்.

அதிசய சிவலிங்கம்
எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே நாம் தரிசிப்போம். ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம் உண்டு. மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. இங்கே சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவர். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து, இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.

வெள்ளை லிங்கம்
கோயில் முன் மண்டபத்திலுள்ள காசி விஸ்வநாதர், வெள்ளை நிறத்தில் காட்சி தருகிறார். அருகில் விசாலாட்சி இருக்கிறாள். சிவபக்தனான ராவணனை அழித்து சீதையை மீட்ட ராமர், தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் மணல் லிங்கத்தை பூஜித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கும் அதே போன்ற மணல் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இவருக்கு பின்புறம் கையில் கோதண்டத்துடன் ராமர் காட்சியளிக்கிறார்.

கல் ஸ்ரீசக்ரம்
அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர்.
திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு.தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது. பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு.

ராஜ உபசார அர்ச்சனை
சிவபெருமானே அரசராக முடிசூட்டிக் கொண்ட தலம் மதுரை. அதற்கு முன் இங்கு லிங்க பூஜை செய்தார். இதனடிப்படையில், தலைமைப்பொறுப்புள்ள பதவி கிடைக்கவும், பொறுப்பான பதவி ஏற்கும் முன்பும் சிவனுக்கு, "ராஜ உபசார அர்ச்சனை' செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

வருடத்திற்கு 54 அபிஷேகம்!
இக்கோயிலில் பூஜையின்போது அர்ச்சகர், சுயரூப சிவன் மற்றும் லிங்கத்தின் மத்தியில் நின்று கொண்டு லிங்கத்தை பூஜிப்பார். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கிறது. சுய வடிவில் இருக்கும் சிவனுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் மார்கழியில் 30 நாட்கள் என வருடத்திற்கு 54 முறை மட்டும் தைலாபிஷேகம் நடத்தப்படும். சிவராத்திரியன்று இரவில் ஹோமத்துடன் சங்காபிஷேகம் நடக்கும்.

தோசை நைவேத்யம்
திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோயில், தோசை நைவேத்தியத்திற்கு பெயர் பெற்றது. இதேபோல் இங்கும் சிவனுக்கு தோசை படைக்கப்படுகிறது. காலை 7.30 மணிக்கு விளாபூஜையின்போது தோசையை நைவேத்யமாக படைக்கின்றனர். மதுரையிலுள்ள பஞ்சகூடத்தலங்களில் இது பிருத்வி (நிலம்) தலமென்பதால், புது கட்டடம் கட்டத் துவங்குபவர்கள் சிவன் சன்னதியில் கைப்பிடி மணலை வைத்து வேண்டி, அதை கட்டடம் கட்டும் மணலுடன் கலந்து பணியைத் துவக்குகிறார்கள்.

"சித்தர்' சிவன்
மதுரையில் திருவிளையாடல் நிகழ்த்திய சிவன், வல்லப சித்தராக வந்து கல் யானையை கரும்பு தின்னச் செய்தார். இவர் பத்மாசனத்தில் வலது கையில் ஆகாயம் காட்டி, இடக்கையில் சாம்பிராணி குங்கிலியம் வைத்து காட்சி தருகிறார். கல்வி, கலைகளில் வளர்ச்சி பெறவும், மன அமைதிக்காகவும் இவருக்கு பவுர்ணமி மற்றும் திங்கள்கிழமைகளில் சாம்பிராணி பதங்க (தைலத்திற்கு முந்தைய நிலை) காப்பிட்டு, பூப்பந்தல் வேய்ந்து வேண்டிக்கொள்கின்றனர். தை, சித்ராபவுர்ணமி மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்
பொதுவாக சிவன் கோயில்களில் அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்னைகளிலிருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்னை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், "பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்' என்று அழைக்கிறார்கள்.

காரமான புளியோதரை
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, கார்த்திகை சம்பகசஷ்டி, மார்கழி அஷ்டமி ஆகிய நாட்களில் விசேஷ பூஜை நடக்கும். இவரது சன்னதிக்குள் வீரபத்திரர் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். பைரவருக்கு ஒரு பங்கு அரிசியுடன், 3 பங்கு மிளகாய் வத்தல் சேர்த்து (ஒரு கிலோ அரிசிக்கு, 3 கிலோ மிளகாய் என்ற விகிதத்தில்) மிகவும் காரமான புளியோதரை செய்து படைக்கிறார்கள்.

முருகனுக்கு பூக்குழி திருவிழா
அம்மன் கோயில்களில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால், சிவன் கோயிலில், அதுவும் முருகனுக்கு பூக்குழி இறங்கும் வைபவம் நடப்பதை பார்த்திருக்கிறீர்களா? இக்கோயிலில் பக்தர்கள் முருகனுக்கு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள். வைகாசி விசாகத்திற்கு மறுநாள் இந்த வைபவம் நடக்கிறது.

ஜுரகர சக்தி
கோயில்களில் மூன்று கால்களுடன் ஜுரத்தைக் குணப்படுத்தும் ஜுரதேவரை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஜுரசக்தியை பார்த்திருக்க முடியாது. இவள் இக்கோயில் பிரகாரத்தில் இருக்கிறாள். அருகில் ஜுரகர லிங்கம் இருக்கிறது. உடல் உபாதை, ஜுரம் உள்ளவர்கள் திங்களன்று ஜுரகர லிங்கம், ஜுரகர சக்திக்கு மிளகு ரசம், சாத நைவேத்யம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.

லிங்கோத்பவருக்கு "பாவாடை'
மத்தியபுரிநாயகி சன்னதிக்கு பின்புறம் அரசமரத்தின் அடியில், லிங்கோத்பவர் காட்சி தருகிறார். திருமணத்தடை உள்ள பெண்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து, பாவாடை, தாலி கட்டி, மஞ்சள், குங்குமம் படைத்து வழிபடுகிறார்கள். இதனால் நல்ல வரன் அமையும் என்பது நம்பிக்கை.

உதிரிப்பூக்கள்...
* "பூலோக கைலாயம்' என்றழைக்கப்படும் இத்தலம், மீனாட்சியம்மன் கோயிலின் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.
* இங்கு அதிகளவில் அறுபது, எண்பதாம் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
* சிவன், அம்பிகைக்கு ஊர் பெயர் அடிப்படையில் "மதுரநாயகர்', "மதுரநாயகி' என்றும் பெயருண்டு.
* பத்து இலைகளுடன் கூடிய தசதள வில்வ மரம் இத்தலத்தின் விருட்சமாகும்.
* கோயில் வளாகத்தில் விபூதி விநாயகர் இருக்கிறார்.

நான் கடவுள் (அஹம் பிரம்மாஸ்மி)

மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் நான் ஞாயிறுக்கிழமை அன்று அதிகாலை மணி அளவில் நண்பர்களுடன் ஐநாக்ஸ் திரைஅரங்கில் அமர்ந்தோம். திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் போது எதோ ஒரு வித ஏமாற்றம். இது கமர்சியல் படமல்ல என்பது பாடல் கேட்கும் போதே தெரிந்து விட்டது, எனவே எதிர்பார்ப்புகளும் அதை ஒட்டியே வைத்து இருந்தேன், அதையும் மீறி சில காரணத்தால் மனதில் நிற்க மறுக்கிறது.

விளிம்பு நிலை மனிதர்களை பற்றிய கதை இது. நாம் இருக்கும் தொழில்நுட்ப உலகில் இருந்து சற்றும் நாம் எதிர்ப்பார்க்காத இரண்டு உலகத்திற்கு நம்மை கூட்டி செல்லும் இத்திரைப்படம். காசியில் பிணத்திற்கு நடுவில் வாழ்ந்து தன்னை தானே கடவுள் சொல்லும் மக்களும், உடல், மன நலம் குன்றியவர்களை அல்லது நன்றாக இருப்பவர்களை ஊனமாக்கி அவர்களை வைத்து பிச்சை எடுக்க வைத்து மிரட்டி பிழைப்பு நடத்தும் பிறவிகளும் ஒருசேர கதையில் கொண்டு வந்து மிரட்டி இருப்பது பாலாவின் தனித்திறமை.

பலரும் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் நேரம் மிகக்குறைவு என்று குறைப்பட்டு இருந்தனர். உண்மையில் காசியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அரை மணி நேரம் வெட்டப்பட்டுள்ளதாக ஊடக நண்பர் ஒருவர் கூறினார்.

இதில் அவலட்சணமான முகம் கொண்டவர்களை காட்டி இருப்பார், மிகையாக இல்லை உண்மையில் இதை போல இருப்பவர்கள் தான். ஆனால் என் மனதிற்கு படுவது இவர்களை காட்சிகளில் அதிகம் காட்டி விட்டார், இவர்கள் கஷ்டப்படுவது உண்மை என்றாலும் அந்த பகுதியை இன்னும் கொஞ்சம் குறைத்து இருக்கலாம், அவர்களை அடிக்கடி அருகில் காட்டுவதையும் தவிர்த்து இருக்கலாம். ஒரு சிலருக்கு பரிதாபத்திற்கு பதில் சலிப்பு வர வாய்ப்புண்டு.

ஆர்யா இதில் வீணடிக்கப்பட்டு விட்டார் அல்லது அவர் நடித்து இருந்த காட்சிகள் வெட்டப்பட்டு இருக்கலாம். கோபமாக நடப்பதையும் பேசுவதையும் நடிப்பாக கருத முடியாது. இந்த படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு பூஜாவிற்கு, அவரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் அதுவும் கடைசி காட்சியில் நம் கண்களில் கண்ணீர் வர வைத்து விடுக்கிறார். கண் தெரியாதவர் போல வருவதால் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தி இருக்கிறார், சிரமமான நடிப்பு தான்.

படம் முழுவதும் சீரியஸ் ஆக இருக்கும் என்று நினைத்து விடவேண்டாம், படத்தில் நடு நடுவே கதையோடு ஒட்டிய நகைச்சுவை வசனங்களும் உண்டு, சிரிக்காமல் இருக்கவே முடியாது, இயல்பான வசனங்கள். அதுவும் உடல் ஊனமுற்ற நபரில் ஒரு சிறுவன் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை, அதே போல பலர். ஒரு காட்சியில் ஆர்யாவை அங்கே உள்ள போலி சாமியார்கள், சாமி! வாயில இருந்து லிங்கம் வருமா? என்று கேட்டதும் ..ம்ம் உன் வாயில அடிச்சா ரத்தம் வேணா வரும் என்று கூற அவர் கப் என்று இருப்பது செம காமெடி:-)) இதில் பல டைமிங் காமெடி என்பதால் அதை பார்த்தால் மட்டுமே உணர முடியும், வெறுமனே கூறுவதால் அந்த காட்சியின் அமைப்பு புரியாது.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் குத்து பாட்டு, வெளிநாட்டில் படமாக்கப்பட்ட காட்சிகள், ஒன்றுக்கும் உதவாத கதை, ஹீரோயிசம் என்று சம்பாதிக்க படம் எடுக்கும் மற்றவர்களிடையே இருந்து விலகி, கவனிக்கப்படாத மக்களை பற்றி அவர்கள் படும் துன்பங்கள்,அவர்களின் ஏக்கங்கள் பற்றி படம் எடுக்க பாலா ஒருவரால் தான் முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதற்காக அவரை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். விமசர்னம் என்ற பெயரில் அவரை குறை கூறாமல் இருக்க வேண்டும்.

பட்டிமன்றம்

பட்டிமன்றம் என்றால் சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் அத்துடன் உடனே நம் நினைவுக்கு வருபவர்கள் லியோனி, பாப்பையா, விசு போன்றவர்கள்... இதில் எனது மனது அளவில் பட்டிமன்றத்துக்கே என இருப்பவர் லியோனி மட்டும் தான். ஏனெனில் இவர் மதுரை தமிழ் மொழியை பயன்படுத்தியதனால் என்னவோ. முன்பே நான் எழுதிய ஒரு கட்டுரையில் வேலூர் மற்றும் திருவண்ணாமலை சென்றதாக குறிப்பிட்டு இருந்தேன். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்ல குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். வேலூரில் இருந்து பேருந்து புறப்பட்ட உடன் "பழைய பாடலா அல்லது புதிய பாடலா" என்ற திண்டுக்கல் ஐ. லியோனியின் நகைச்சுவை பட்டிமன்றத்தை கேட்க ஆரம்பித்தேன். இதே பட்டிமன்றத்தை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என்வீட்டில் கேட்டு இருக்கிறேன். அப்போது அறியதா வயதில் எதோ ஒன்று என விட்டுவிட்டேன். இப்போது அறிந்த வயதில், என் கைத்தொலைப்பேசி வழியாக கேட்கின்ற போது தான் அதனுடைய முக்கியத்துவம் தெரிகிறது. ஒவ்வொரு பேச்சாளரும் அவர்களுக்குரிய தலைப்பில் ஒவ்வொரு பாடலையும் எடுத்து நகைச்சுவையாக விளக்கிய விதம் ஆணி அடித்தது போல் இருந்தது. பேச்சாளர்கள் காதல், குடும்பம், சமுதாய அக்கறை, தத்துவம் போன்ற தலைப்புகளில் எடுத்துக்கொண்ட பாடல்களில் சில பாடல்கள் கேட்டு இருந்தாலும் நுணுக்கமா ஆராய்ந்தது இல்லை. பல உதாரண பாடல்கள் நான் கேட்காத பாடல்கள். அவ்வளவு அருமையான பாடல்கள் இருக்கின்ற என்று அன்று தான் தெரியவந்தது. இதை விட பட்டிமன்ற விவாதம் ஆரம்பத்திலும், முடிவிலும் நடுவர் பேசியது தான் வயிறை புண் ஆக்குகின்ற இடம். முழுமையான ஒரு விவாதம் நடைப்பெற்று முடிவு தெரிந்தது என மனநிறைவுக்கு வந்து நான் திரும்பி பார்த்த போது, அண்ணாமலையார் குடிக்கொண்டு இருக்கும் திருவண்ணாமலை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் பட்டிமன்றத்தை கேட்டு மகிழுங்கள்.

வாழ்க வளமுடன்..

எப்போது மாறும் இந்த அவலம்

மதிய வேளையில் அலுவகத்தில் உள்ள உணவு அருந்தும் அறையில் கிடைக்கக் கூடிய தென்இந்திய உணவு என்ற பெயரில் சாப்பிட முடிய சாப்பாட்டை வடஇந்திய நண்பர்களுடன் சேர்த்து சாப்பிடும் போது சென்னையில் உள்ள மிகப்பெரிய பிரச்சனையான வாடகையை பற்றி விவாதித்து கொண்டு இருந்தோம். வடஇந்திய நண்பர்களில் ஒருவர் அடையாரில் குடிஇருப்பதாகவும், மாத வாடகை ரூ. 20,000 என்றும், இப்போது அதே வீட்டிற்கு ரூ.30,000 வரை மக்கள் வர தயாராக இருப்பதாகவும் கூறிக் கொண்டே இருந்தபோது, மற்றொரு நண்பர் வேளச்சேரியில் ரூ. 30,000 முதல் ரூ.40,000 வரை உள்ளது என்றும், சென்னை கூடிய விரைவில் மும்பையை விட வந்து விடும் என்றும் விவாதம் சென்று கொண்டு இருந்தது. மதுரை, சேலம், நெல்லை, கன்னியாக்குமரி மற்றும் நாகர்கோவில் போன்ற நகரங்களில்/ஊர்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடிவந்து கொண்டு இருப்பவர்களின் நிலை இப்போது மிக பெரிய கேள்விக்குறி. அரசாங்கம் பல இலவச சலுகைகள் அறிவித்து இருந்தாலும், மக்களின் அடிப்படை பிரச்சனையான வாடகையை பற்றி கவலை கொள்ளவில்லை. நாடேடுகளில் இதை பற்றி விரிவாக விவரித்து இருந்தாலும், அரசியல்வாதிகள் அதைவைத்து அரசியல் பண்ணுக்கின்றனர் தவிர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, தமிழ்நாட்டில் கூட பல தொழிற்சாலைகள் மூடப்படுகிறது என்று செய்திகள் பலவண்ணம் வந்து கொண்டு இருந்தாலும், வாடகைப் பிரச்சினை சிறிதளவு கூட குறையவில்லை என்பது எனது வருத்தம் மட்டும் இல்லாமல், சென்னையில் தங்கி இருந்து வேலை பார்க்கும் அனைத்து மக்களின் கவலை...

Monday, February 02, 2009

வெண்ணிலா கபடிக்குழு

பழனியின் கரிசல்மண்ணும், மதுரையின் வீரமும், வீரவிளையாட்டும் மற்றும் தென்றல் காற்றில் ஆடும் மல்லிகை போன்ற மெல்லிய காதலும் ஒருசேர இத்திரை படத்தில் காணலாம். லகான், சக் தே இந்தியா போன்ற இந்தி திரைப்படமும், சென்னை 600028 தமிழ் திரைப்படமும் சேர்ந்த கதை கலவை எடுத்து கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான கபடியை கலக்கலாக காட்டி இருக்கும் குழு தான் வெண்ணிலா கபடிக்குழு. படத்தின் கதையோடும், காட்சிகளோடும் மெலிதாக இழையோடி மெல்ல... மெல்ல... புன்னகை வரவழைக்கும் காமெடிகமும், வசனக் காட்சிகளும் சுசீந்திரனை இயக்குனர் என்று ஏற்று கொள்ள வைக்கும். இத்திரைப்படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும் போது கண்டிப்பாக ஒரு மனதிருப்தி இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

மதுரை மண்ணில் எடுத்த எந்த திரைப்படமும் தோற்காது என்பதை நிருபிக்கும் படம்

இருண்டது அக்கால சிரிப்பு

மாபெரும் நடிகர் திரு. எம்.என்.நம்பியார் மறைந்த சோகத்தை மறப்பதற்குள் மற்றொரு உயர்திரு நகைச்சுவை திலகம் திரு. நாகேஷ் மறைந்தது என்னை சோகக்கடலில் ஆழ்த்தியது.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன், சாதிக்காமல் வீடு திரும்ப மாட்டேன் என்று கூறி சென்னைக்கு வந்த நாகேஷ் துவக்க காலத்தில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார். சிறிது காலம் ரெயில்வேயில் பணியாற்றினார். ஆனால் அவருக்கு அதில் திருப்தி ஏற்படவில்லை. இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை "கம்ப ராமாயணம்' நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது "வயிற்று வலி நோயாளி' வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். "டாக்டர்...' என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., "நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்' என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்."மேக்அப்' போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. "தாமரைக்குளம்” இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்."திருவிளையாடல்" படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. "காதலிக்க நேரமில்லை" படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, "சியர்ஸ்' சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர். சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கையை நாகேஷ் பிரதிபலித்த அளவுக்கு வேறு யாராவது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அந்த அளவு பிரமாதமாக நடித்திருப்பார் நாகேஷ்.

எம்ஜிஆருடன்...


புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரது பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்ஜிஆருடன் நடித்த படங்களின் பட்டியல் மிகப் பெரியது. இடையில் சில காலம் இருவருக்கும் ஒரு பிரிவு வந்தாலும், மீண்டும் நாகேஷை அரவணைத்துக் கொண்டார் எம்ஜிஆர். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நாகேஷுக்காகவே ஒரு பாத்திரத்தை உருவாக்கினார் அப்படத்தின் இயக்குநரான எம்ஜிஆர். குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி மிகவும் உடல் பாதித்த நிலையில் அவர் அதிலிருந்து மீண்டு வர உதவியவர் எம்ஜிஆர். 'அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சேர்த்து இப்பவே குடிச்சேன். அதனால நான் பிழைப்பேனான்னே தெரியாத நிலை. ஆனால் மருத்துவர்களும் அண்ணன் எம்ஜிஆரும் எனக்கு புதுப்பிறவி கொடுத்துட்டாங்க' என்று ஒரு முறை கூறியிருந்தார் நாகேஷ். திரையுலகில் தாம் சம்பாதித்த செல்வத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தார். ஆனால் பின்னர் பெரும் நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது. தி.நகர் அவரது நாகேஷ் தியேட்டர் பிரச்சனையில் சிக்கிய போது பகையை மறந்து எம்ஜிஆர் அவருக்கு உதவி செய்தார்.

ரஜினி-கமல் யுகத்திலும்...


ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மிகச் சிறந்த நகைச்சுவைப் படமான தில்லுமுல்லுவில், நடிகர் நாகேஷாகவே வந்து அசத்தியிருப்பார். பின்னர் படிக்காதவன் படத்தில் ரஜினியின் வளர்ப்புத் தந்தையாக நடித்து நெகிழ்ச்சி தந்தார்.ஆனால் கலைஞானி கமலுடன் அவருக்கு ஒரு ஸ்பெஷல் நெருக்கம் இருந்தது, கடைசி வரை. கமல் ஹாசனின் பிற்காலப் படங்கள் அனைத்திலுமே நாகேஷுக்கு மறக்க முடியாத பாத்திரங்கள். அபூர்வ சகோதரர்கள் மூலம் ஒரு விதத்தில் நாகேஷின் பைனல் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்தவரே கமல்தான் என்றாலும் மிகையில்லை. மைக்கேல் மதனகாமராஜன், நம்மவர் என அந்தப் பட்டியல் தசாவதாரம் வரை தொடர்ந்தது. குறிப்பாக மகளிர் மட்டும் படத்தில் பிணமாக அவர் 'நடித்த' ஒரு காட்சியைப் பார்த்து ஹாலிவுட் நடிகர்களே வியந்துபோனதாக கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கா விருது நாகேஷுக்குக் கிடைத்தது. இதோடு இல்லாமல் விஜயுடன் "பூவே உனக்காக", மாதவன் உடன் "மின்னலே" என தற்போது உள்ள நடிகர்களுடன் நடித்து திறமையை காட்டினர். இப்படிப்பட்ட மாபெரும் நகைச்சுவை நடிகரின் மறைவு திரைஉலகத்துகே, தமிழ் நாட்டுக்கே பெரும் இழப்பு. இப்படிபட்ட உலகமனிதர் இவ்வுலகை விட்டு பிரிந்து, சொர்க்கத்தை அடைந்து இருப்பார் என்று நம்பி, என் இரத்த கண்ணீரை துடைத்து கொள்கிறேன்.