Friday, January 23, 2009

புறநகர் புகைவண்டி

இந்தியாவில் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள போக்குவரத்து தொடர்பு...தமிழ்நாட்டில் சென்னை மக்களுக்கு மட்டும் கிடைத்த வரப்பிரசாதம்....
கடந்த ஒரு மாதகாலமாக புறநகர் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறேன். மற்ற போக்குவரத்து தொடர்பை விட சுலபமான, பாதுக்காப்பான, சிக்கனமான பயணம். சைதையிலிருந்து தாம்பரம் வர பேருத்திலோ, இரண்டு சக்கர வாகனத்திலோ வந்தால் குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். ஆனால் இதில் 20 நிமிடம் தான். அதே சமயம் அதற்கு ஆகும் செலவு குறைந்தது ரூ. 1000. ஆனால் மாதந்திர பயணச்சீட்டு எடுத்தால் கடற்க்கரை நிலையத்தில் இருந்தே தாம்பரம் வரை ரூ. 115.
மக்கள் வெள்ளத்தில் சென்னை தத்தளித்து கொண்டு இருக்கும் வேலையில் புறநகர் புகைவண்டி மட்டும் இல்லையெனில் சென்னை சென்னையாக இருக்காது என்று தெளிவாக தெரிகிறது.

Sunday, January 18, 2009

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்

தல வரலாறு: சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி, இத்தலத்தில் லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். பிற்காலத்தில் லிங்கம் இருந்த இடத்தைச் சுற்றி புற்று வளர்ந்து, வேல மரங்களால் சூழப்பட்டது. பொம்மி என்பவர் இப்பகுதியை ஆண்டபோது, அவரது கனவில் தோன்றிய சிவன், இங்கு லிங்கம் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். உடனடியாக லிங்கம் கண்டெடுக்கப்பட்டது. பெரிய கோட்டையுடன் அவர் கோயில் எழுப்பினார். இந்த இடம் நீரால் சூழப்பட்டிருந்ததால் சிவனுக்கு, "ஜலகண்டேஸ்வரர்' என்று பெயர் சூட்டப்பட்டது. பக்தர்களின் உடல், மனதில் ஏற்படும் பிணிகளை நீக்குபவராக அருளுவதால், "ஜுரகண்டேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
பல்லிகளின் சிற்பம்: சூரியன், சந்திரனை விழுங்கும் ராகு, கேது மற்றும் தங்க, வெள்ளி பல்லிகள் இக்கோயில் சுவரில் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களும், பல்லி விழுந்ததால் தோஷம் என நம்புபவர்களும் சிவனை வணங்கி இவற்றையும் வணங்கிச் செல்கிறார்கள்.
தினமும் திருமஞ்சனம் : சிவன் சன்னதிக்கு பின்புறம் திருப்பதி வேங்கடேசர் சன்னதி இருக்கிறது. திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்துள்ளனர். சுவாமியின் பாதத்தில் 11 சாளக்கிராம கற்கள் உள்ளன. புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். இவருக்கு தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்கின்றனர்.
விளக்கிற்கு நைவேத்யம் : கோயில்களில் சுவாமிகளுக்கு நைவேத்யம் படைத்து பூஜை செய்வது தெரியும். இங்கே, விளக்குகளுக்கும் நைவேத்யம் உண்டு. அகிலாண்டேஸ்வரி அம்பாள் சன்னதி எதிரில் ஒன்பது தீபங்கள் உள்ளன. இவற்றை நவசக்திகளாக கருதி, சுத்தான்ன நைவேத்யம் மற்றும் சிறப்புபூஜையை வெள்ளிக்கிழமைகளிலும், தமிழ் மாத பிறப்பன்றும் படைக்கப்படுகிறது. மேளதாளத்துடன் விசேஷ பூஜையும் நடக்கும்.
பார் புகழும் கோட்டை : அரசர் பொம்மி, சிவனுக்கு கோயில் எழுப்பியபோது, 2 ஆயிரத்து 500 அடி நீளம், ஆயிரத்து 500 அடி அகலத்துடன் பிரமாண்டமான கோட்டையைக் கட்டினார். இக்கோட்டையின் அமைப்பு வியக்கும்படியாக உள்ளது. கோட்டையைச் சுற்றிலும் 25 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. இக்கோட்டை வேலூருக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கால சம்ஹாரமூர்த்தி : மூலஸ்தானத்தில் ஜலகண்டேஸ்வரர் ருத்ராட்ச பந்தலின் கீழ் காட்சி தருகிறார். இவருக்கு பக்தர்கள் ருத்ராபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். காலசம்ஹார மூர்த்தி உற்சவராகக் காட்சி தருகிறார். ஆயுள்விருத்தி பெற, விபத்து பயம் நீங்க இவருக்கு ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள். அறுபது, எண்பதாம் திருமணங்களும் (சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்)நடக்கின்றன. பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க, தாங்கள் அணிந்திருக்கும் திருமாங்கல்யத்தை காணிக்கையாக செலுத்தி விட்டு புது மாங்கல்யம் அணியும் பிரார்த்தனையும் உண்டு.
கங்கை தீர்த்தம்: பிரகாரத்தில் ஒரு கிணறு உள்ளது. இதிலுள்ள நீரை கங்கை தீர்த்தமாக கருதுகின்றனர். கிணற்றின் அருகில் "கங்கா பாலாறு ஈஸ்வரர்' என்ற பெயரில் சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கம் இந்த கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதன் பாணம் கூம்பு வடிவில் இருப்பது சிறப்பான அமைப்பு. லிங்கத்தின் பின்புறம் பைரவர் இருக்கிறார். காசியில் உள்ளது போல, சிவலிங்கம், கங்கா தீர்த்தம், பைரவர் என மூன்றையும் தரிசிக்கலாம். எனவே, இந்த சன்னதியை, "வேலூர் காசி' என்று அழைக்கிறார்கள்.
முத்தேவியர் தரிசனம்: சிவன் சன்னதிக்கு இடப்புறம், ருத்ராட்ச பந்தல் வேய்ந்த அகிலாண்டேஸ்வரி சன்னதி இருக்கிறது. இந்த சன்னதிக்கு வெளியேயுள்ள மண்டபத்தில் சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோர் அருகருகில் காட்சி தருகின்றனர். ஒரே சமயத்தில் கலைமகள், திருமகள், மலைமகள் தரிசனம் இங்கு கிடைப்பது விசேஷம்.
கலையம்ச கல்யாண மண்டபம் : கோயில் வளாகத்தில் வித்தியாசமான சிற்பங்களுடன் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது. வெண்ணெய் பானையுடன் கிருஷ்ணர், பைரவர், நடராஜர், சரபேஸ்வரர், சிவமூர்த்தங்கள், கண்ணப்பர் வரலாறு, பெருமாளின் தசாவதாரம், நரசிம்மரின் பாதம் அருகில் வணங்கியபடி கருடாழ்வார், மத்தளம் வாசிக்கும் பெருமாள், யோகாசனம் செய்யும் மகரிஷி, மேல் விதானத்தை தாங்கும் கிளிகள், தேவலோகப்பெண்கள் என கண்ணைக்கவரும் சிற்பங்களை வடித்திருக்கின்றனர். இவற்றின் அழகில் லயித்த ஆங்கிலேய தளபதி ஒருவர் இந்த தூண்களைப் பெயர்த்துச் செல்ல விரும்பினார். தூண்களின் வரிசை மாறக்கூடாது என்பதற்காக எண்களையும் பொறித்தார். மண்டபத்தை பெயர்த்துச் செல்ல கப்பலையும் வரவழைத்தார். ஆனால், அக்கப்பல் வழியிலேயே கடலில் மூழ்கி விட்டது. எனவே, அவர் திட்டத்தைக் கைவிட்டார்.

அண்ணன், தம்பி தரிசனம்

என்னடா இது பொங்கல் என்று தான் தொலைக்காட்சி பார்த்து வீணடித்து விட்டோம் என்று நினைத்து, மாட்டுப்பொங்கல் அன்று எங்கயாவது போலாம் என்று நினைத்து செட்டியர்களின் நகரமான காரைக்குடிக்கு அருகில் உள்ள பிள்ளையார்ப்பட்டியை தேர்ந்து எடுத்தேன். என்னுடைய அதிர்ஷ்டமோ என்னோவோ 3 மணிநேரத்தில் பார்க்க வேண்டிய கணபதியை 30 நிமிடத்தில் தரிசித்து வெளியில் வந்தேன். சற்று நேரம் இருந்ததால், குன்றக்குடிக்கு (3கீ.மீ தூரம் தான்)போய் கணபதியின் தம்பியையும் பார்த்தோம். விசஷ நாளில் குடும்பத்துடன் வெளியில் செல்வது நன்றாக தான் இருந்தது.

ஆன்மிக சுற்றுலா

தொழில் நூட்ப கல்லூரி நான் படிக்கும் போது ஒரு நாள் சுற்றுலா என்று அடிக்கடி கொடைக்கானல் போன்ற பகுதிக்கு செல்வோம். அதில் விதிவிலக்காக முதல் வரிசையில் அமர்த்திருக்கும் நபர்கள் மட்டும் தான் சேர மாட்டர்கள். பழைய நண்பர்கள் உடன் நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு நாள் சுற்றுலா என தொடங்கிய பேச்சு வார்த்தையின் போது முதல் வரிசை நண்பர்கள் சேர்ந்து தான் ஆச்சரியம். முதலில் திருமலையில் ஆரம்பித்து வேலூர் பொற்கோவிலில் வந்து முடிந்தது. தமிழ்நாட்டு வரைபடத்தில் இக்கோவிலை காணும் போது திருவண்ணாமலையும் அருகில் இருப்பதை அறிந்து அதையும் சேர்ந்து கொண்டோம். இதை விட ஆச்சரியம் அன்று கிரிவல நாள். நண்பர்கள் சிலபேர் இரண்டு கோவிலும் ஒரே நாளில் கஷ்டம் என்று கூறினாலும், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை நினைத்து பயணத்தை தொடங்கினோம்.


வேலூர் பொற்கோவில்:

நாங்கள் வாசலில் நின்று விசாரித்த பொது, திருமலையை போன்று கை தொலைபேசி, புகைப்பட கருவி என எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லாததினால், அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாக பணத்தை கொடுத்து பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை. நாங்கள் சென்ற வேளை மதியம் என்பதால், தேவஸ்தான அன்னதான அறைக்கு சாப்பிட்டோம். அன்னதான அறை திருமலை போன்று இருந்தாலும், சாப்பாடு பணம் சொடுத்து தான் சாப்பிட்டோம். பொற்கோவிலை பார்க்க செல்ல தொடங்கிய போது, கூண்டில் போட்டு அமைத்து விட்டார்கள். இதுவும் திருமலையை பார்த்தே செய்து இருந்தார்கள். பொற்கோவிலுக்கு என தனியாருக்கு சொந்தமான பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சி செய்து கொண்டு இருப்பத்தை பார்க்க முடிந்தது. இதை தவிர பல பாதுகாப்பு கூண்டை தாண்டி ஒரு வழியாக வானத்தில் உள்ள விண்மீன்கள் வடிவிலான ஒரு வாசலுக்கு வந்தோம். இப்போது தான் பொற்கோவிலுக்கு வந்ததாக ஒரு எண்ணம் வந்தது. வேலூர் என்றாலே வெயில் தான் நினைவுக்கு வரும். ஆனால் விண்மீன் பாதையில் ஒருவிதமான குளிர் இருந்தது. எல்லா பாதைகளை கடந்து பொற்கோவிலை தரிசத்து வெளியில் வந்தோம். பொற்கோவிலில் கண்ட அழகை நான் இங்கு விவரிக்க வில்லை. ஏன் என்றால் அவ்வழகை நீங்களும் காண வேண்டும் என்பதற்க்காக.


வேலூர் கோட்டை:


இந்து, முஸ்லீம், கிறித்தவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய அக்கால அரண். கோட்டையை சுற்றி பார்த்து விட்டு, ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு அண்ணமலையரை பார்க்க வேலூரை விட்டு கிளம்பினோம். ஜலகண்டேஸ்வரர் பற்றி விரிவாக அடுத்த பதிப்பில் எழுத இருக்கிறேன்.


திருவண்ணாமலை:


அன்றைக்கும் மக்கள் கூட்டத்தில் தத்தளித்து கொண்டு இருந்த கோவிலில், எங்களுடன் வந்த நண்பரின் மூலமாக இலவசசீட்டை பெற்று உடனடியாக தரிசனத்தை முடித்து கொண்டு கிரிவலத்தை இரவு சரியாக 12:10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5:30 முடித்தோம். அன்றைய நாள் முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களுக்கு சென்றதால், கிரிவலத்தில் பலரது கண்களில் ரத்தம் வரபோவதை கண்டேன். இருந்தாலும் அதை யாரும் வெளியில் காட்டிக்கொள்ள வில்லை. என்ன தான் பல துயரங்கள் இந்த சுற்றுலாவில் கண்டாலும், சந்தோசமாக நிறைவு செய்து சென்னை திரும்பும் போது அடுத்த சுற்றுலாவிற்கு இடத்தை ஆராய தொடங்கி விட்டோம்.

இந்த சுற்றுலாவின் புகைப்படத்தை எனது வலைதளத்தில் காணலாம்.

Monday, January 05, 2009

ஏமாற்றப் படும் மக்கள்

மக்களால் மக்களுக்குக்காக நிறுவப்பட்ட மக்கள் ஆட்சி என்ற அரசாங்கம் தற்போது மக்களுக்கு பல்வேறு வகையில்/வழிகளில் மக்களுக்கே தெரியாமல் ஏமாற்றி பிழைக்க ஆரம்பித்து விட்டனர். இதை அரசாங்களுக்கு பின்னால் உள்ள அதிகாரிகள் மக்களுக்கு தெரியாமல் வரி வாங்கும் அளவுக்கு அறிவாளி ஆகி விட்டார்களா அல்லது சாதரண குடி மக்களுக்கு இன்றும் பொது அறிவு கிட்டவில்லையா என்பது எனது மனகேள்வி. உதாரணத்திற்கு நான் கண்ட ஏமாற்று வழிகள்…

சொகுசு பேருந்து

மக்கள் வசதிக்காக அரசாங்கம் விட்ட பேருந்து தான் இது. முதலில் ஒன்று/இரண்டு என புதிய சொகுசு பேருந்தினை இயக்கி, பின்பு மெதுவாக புதிய பேருந்தினை மக்களுக்கு தருகிறோம் என்ற பெயரில் பழைய பேருந்தினை நிறுத்தி விட்டனர். எடுத்துக்கட்டாக பழைய பேருந்து பயண சீட்டு ரூ3.50. ஆனால் புதிய சொகுசு பேருந்து பயண சீட்டு ரூ 8. பேருந்து நிலையத்தில் "சதா பஸ் எல்லாம் வரதப்பா" என்று பிச்சைக்காரன் கூறும் அளவு வந்துவிட்டது. பின்னர் சாதரண ஜனங்கள் எப்படி தான் பிழைப்பார்கள். பெட்ரோல்/ டீசல் விலைக்கு ஏற்ப பேருந்து பயண சீட்டு விலையை 50 பைசா கூட ஏற்றினால் போராட்டம் வெடித்துவிடும் என தெரிந்து கொண்டு, இப்படி மறைமுகமாக விலை உயர்ந்த புதிய சொகுசு பேருந்தினை கொடுத்து விட்டனர். இதை விட கொடுமையான விஷயம், இந்தியாவிலே தமிழகத்தில் தான் மிக குறைந்த பேருந்து பயண சீட்டு என்ற அறிக்கை வேறு.

இப்படி பொது ஜனங்களை ஏமாற்றி பணத்தை புடுங்குவதற்கு பதிலாக இலவசமாக தந்துக்கொண்டு இருக்கின்றவற்றை நிறுத்தினால் போதும் பெருமளவு நிதி குமை குறையும் அல்லது மக்களிடம் கேட்டு கொண்டாலே கண்டிப்பா உதவி செய்வார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

நம் நாட்டின் மிகப்பெரிய வங்கி என பெருமையுடைய, அதிக கிராம மக்களின் கணக்குகளை உடைய, நாட்டின் பொருளாதரத்தை காக்கும் பெறுப்பில் உடைய வங்கி கூட மக்களிடம் ஏமாற்றி பணத்தை கேவலமா பிடுங்கி சாப்பிடுகின்றனர் என்பது மிகுந்த வருத்தம் தரும் விஷயம். உதாரணமாக என் கணக்கு மதுரை-பசுமையில் உள்ளது. நான் மதுரை-புதூரில் இருந்து சிறு தொகையை என் கணக்குக்கு போட்டால் ரூ.25யை வங்கி எடுத்து கொள்கிறது. ஏன் என்று கேட்டால் வேறு வேறு வங்கி என்ற விளக்கம் கூறுகின்றனர். கணினி மயமாக்க பட்ட நிலையில் இது நம்பும் படியாக இல்லை. ஆனால் வலை தளத்தில் இருந்து வேறு தனியார் வங்கியிலிருந்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கணக்கிற்கு பரிவர்த்தகம் செய்தால் வரி இல்லை. இதற்குரியாக காரணம் யாருக்கும் தெரியவில்லை. முன்பே கூறியது போல் அதிக கிராம மக்களின் கணக்குகளை உடைய இவ்வங்கி கிராம மக்களிடம் பணத்தை பிடுங்குவது வேதனையான விஷயம்.
இன்னும் எத்தனை காலம் தொடர போகிறதோ இந்த ஏமாற்று வழிகள்?

குளிர்

மதுரையில் குளிர் காலத்தில் சாதரணமாக 22 முதல் 25 செல்சியஸ் தான் இருக்கும். ஆனால் போன வாரத்தில் 18 செல்சியஸ் இருந்தது. கொடை போகமலே இதயத்தில் அப்படிப்பட்ட மன குளிர்ச்சி... இது தொடரட்டும்.

Saturday, January 03, 2009

2008 நிகழ்வுகள்

2008ல் பல நிகழ்வுகள்/ நினைவுகள் இருந்தாலும் எனக்கு சொல்லும்படியாக இருந்தது, வேலை செய்யும் இடமாற்றம் மட்டும் தான்.

இதோ என்னுடைய மறவா 2008:

* வேளங்கண்ணி கோவில்

* நந்து திருமணம்.

* கட்டுமர பயணம்.

* எச்.சி.ல். வேலை தொடர் முடிவு மற்றும் எச்.சி.ல். நண்பர்கள் வீடு வரை வந்து அனுப்பிவைத்தது.

* பாலாஜி திருமணம் (எச்.சி.ல். நண்பர்)

* சி.டி.எஸ் வேலை ஆரம்பம்.

* வடபழனியிலிருந்து சைதை

* நவாஸ் திருமணம் (தொழில் நூட்ப கல்லூரி நண்பர்)

* வினோத் கண்ணன் திருமணம் (பொறியிரர் கல்லூரி நண்பர்)

* பெங்களூர் பயணம் (பொறியிரர் கல்லூரி நண்பர்கள் இணைந்து)

* காஸ்கேடு விருந்து (சி.டி.எஸ் - ஹே.இ. பி நண்பர்கள்)

* மெரீனா கடற்கரை புத்தாண்டு விழா.

* மனித சங்கிலி என்ற பெயரில் போக்குவரத்து நெரிசல்

* நிசா புயல்

இதோடு மட்டும் இல்லாமல் உலகில் நடந்த சில முக்கிய நினைவுகளை கொடுக்க விரும்பினேன். இதற்க்காக பல்வேறு வலைதளத்தில் இருந்து எடுத்த சில பதிப்புகள்...

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் பஞ்சம்

கே.பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் படம் பார்த்தவர்கள், தண்ணீருக்கு இப்படியெல்லாமா கஷ்டப்படுவார்கள் என அதிசயித்துப் போய் அதிர்ச்சியும் அடைந்தனர். ஆனால் போர்க்காலத்தில் ஏற்படுவதைப் போன்ற ஒரு பேரவல நிலை ஆகஸ்ட் 25ம் தேதியன்று தமிழகத்தில் ஏற்பட்டது. ஆனால் இது தண்ணீருக்கல்ல. வாகனங்களின் ஆதாரமான பெட்ரோல், டீசலுக்குத்தான் இந்தப் பஞ்சம். தலைநகர் சென்னையில் பெட்ரோல், டீசல் இல்லாமல் பங்குகள் மூடப்பட்டன. இந்த திடீர் பஞ்சத்தால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.
விடிய விடிய பெட்ரோல், டீசலைத் தேடி வாகனங்களை தள்ளிக் கொண்டும், திறந்திருந்த ஓரிரு பெட்ரோல் பங்குகள் முன்பு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தும், கேன்களோடு அலைந்து திரிந்தும் மக்கள் பட்ட அவதி சாமானியத்திற்கு மறக்க முடியாதது. 2 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பெட்ரோல், டீசல் பஞ்சத்தால், தமிழக மக்கள் சொல்லொணா துயரத்தை சந்தித்து விட்டனர். 2008ம் ஆண்டில் தமிழக மக்களால் மறக்க முடியாத துயரங்களில் இதுவும் ஒன்று.

உலுக்கிய மின்வெட்டு

தமிழகத்தை இதுவரை இல்லாத அளவுக்கு இருளில் மூழ்கடித்த ஆண்டு 2008. எங்கு பார்த்தாலும் கரண்ட் இல்லை என்பதே கரண்ட் பிரச்சினையாக இருந்தது. பெய்ய வேண்டிய மழை பெய்யத் தவறியதால் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மின் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்தது. நகர்ப்புறங்கள் நரகமாகிப் போகும் அளவுக்கு மின்தடை வாட்டி எடுத்தது. தினசரி இத்தனை மணி நேரத்திற்கு மின்சாரம் கிடையாது என்று அரசு பகிரங்கமாக பட்டியலிட்டு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போனது. கிராமப்புறங்களில் விவசாயம் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நகர்ப்புறங்களிலோ தொழில் உற்பத்தி அடி வாங்கியது.

ஜல்லிக்கட்டை 'தடுத்த' உச்சநீதிமன்றம்

தமிழர்களின் வீர விளையாட்டோடு சட்டம் சீ்ண்டிப் பார்த்த ஆண்டு இது.

பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தென் மாவட்ட மக்களுக்கு கசப்பு பொங்கலைக் கொடுத்த ஆண்டு இது. ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிர்ச்சி அடைந்த அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதி மக்கள் துக்க பொங்கல் அனுஷ்டித்தனர். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்தனர். தமிழக அரசும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரும் எடுத்த கடும் முயற்சிகளின் விளைவாக சில நிபந்தனைகளின் அடிப்படையில், ஜல்லிக்கட்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. உற்சாகத்தோடு பொங்கலைக் கொண்டாடி முடித்தனர் தென் மாவட்ட மக்கள்.

நெகிழ வைத்த உறுப்பு தானம்

தமிழக மக்களை நெகிழ வைத்தனர் ஹிதேந்திரனின் பெற்றோர். அவர்கள் செய்தது சாதாரணமானதல்ல, தங்களது ஒரே மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து உயரிய இடத்தைப் பிடித்தனர். இதுபோன்ற தானங்களுக்கு பிள்ளையார் சுழியும் போட்டு வைத்தனர்.


சென்னை அருகே உள்ள திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதியின் ஒரே மகன்தான் ஹிதேந்திரன். செப்டம்பர் 20ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார் ஹிதேந்திரன். மூளை செயலிழந்தது. இனியும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று டாக்டர்கள் கூறி விடவே, சட்டென சுதாரித்த அசோகன், புஷ்பாஞ்சலி தம்பதிகள், தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுக்கின்றனர்.

இருதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம் முதலியவற்ற செப்டம்பர் 21ம் தேதி தானமாக வழங்கினர். இதற்காக அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு, காவல்துறையும், மருத்துவமனைகளகும் பேருதவி புரிந்தன. ஹிதேந்திரனின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளால் ஐந்து பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது. இந்த உறுப்பு தானம் தமிழகத்தையே உலுக்கி விட்டது. முதல்வர் கருணாநிதி முதல் அத்தனை தலைவர்களும் ஹிதேந்திரனின் பெற்றோரை பாராட்டிப் புகழ்ந்தனர். ஹிதேந்திரனின் பெற்றோர் ஏற்படுத்தி வைத்த இந்த அருமையான செயல், தமிழகத்தில் பேரலையை ஏற்படுத்தி இன்று பலரும் மூளைச்சாவை சந்திக்கும் தங்களது குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டின் சிறந்த மனிதர்கள் விருது கொடுப்பதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதியும் படைத்தவர்கள் டாக்டர்கள் அசோகன் மற்றும் புஷ்பாஞ்சலி என்பதில் சந்தேகமில்லை.

சென்னை சட்டக் கல்லூரி மோதல்:

ஸ்காட்லாந்து யார்டுக்கு அடுத்து நம்ம போலீஸ்தான் என்று தமிழக போலீஸார் காலரை தூக்கி விட்டுக் கொண்டு லத்தியுடன் ராயலாக திரிந்த காலமெல்லாம் போய் விட்டது. நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மாணவர்கள் வன்முறை காவல்துறையின் பெருமையை தூக்கிப் போட்டு துவம்சம் செய்து விட்டது. தங்களது கண் முன்பாக சக மாணவனை மற்ற மாணவர்கள் மாட்டை, ஆட்டை அடிப்பது போல போட்டு அடித்தபோது அதை சத்தமே போடாமல், கல் மனதோடு கண்டு களித்துக் கொண்டிருந்த காவல்துறையைப் பார்த்து நாடே வெட்கிப் போனது.

இந்தியா

டாடாவின் நானோ

வருமா, வராதா என்று பலரும் பெட் கட்டிக் கொண்டிருந்த நிலையில், காரைக் கொண்டு வந்து நிறுத்தி அனைவரையும் ரத்தன் டாடா வியப்பில் ஆழ்த்திய தினம் ஜனவரி 10. வசதியான இருக்கைகள், அழகிய டிசைன், ரூ. 1 லட்சம் விலை என அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய டாடா நானோ காரை, டெல்லியில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியி்ல் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தினார். இந்தியாவி்ல் உள்ள நடுத்தர மக்களின் விருப்ப வாகனமாக இனி நானோ விளங்கும் என்று கூறிய டாடா, ஒரு பைக் வாங்குவதை விட சற்றே கூடுதலான விலை என்பதால் மத்திய வர்க்கத்து மக்களுக்கான கார், மக்களின் கார் என்றும் நானோவை அறிமுகப்படுத்தினார் டாடா. ஆனால் சிங்கூரில் மமதா பானர்ஜி கொடுத்த முட்டுக்கட்டையால் மேற்கு வங்கத்தை விட்டே காலி செய்து இப்போது குஜராத்துக்குள் நுழைந்துள்ளது நானோ.

நானோவின் வருகையை நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது..

மும்பை இன வெறி தாக்குதல்:

இந்தியா, இந்தியர்கள் என்ற பதத்திற்கே பெரும் ஆப்பு வைத்தார் ராஜ் தாக்கரே இந்த ஆண்டு.

மும்பை மராத்தியர்களுக்கே, இங்கு ஒரு வட இந்தியரும் இருக்கக் கூடாது என்ற வெறி முழக்கத்தோடு, பிப்ரவரி 4ம் தேதி ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சியினர் வன்முறையில் குதித்து மும்பையை ரத்தக்களறியாக்கினர். அப்பாவி வட இந்தியர்களை விரட்டி விரட்டித் தாக்கினர். பழ வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள், ராஜ் தாக்கரே கட்சியினரின் வெறிக்கு இலக்காகினர். ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் மும்பையை விட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு கிளம்பினர். நடிகர் அமிதாப் பச்சனின் வீடும் தாக்கப்பட்டது. ராஜ் தாக்கரேவின் இந்த அட்டூழியத்திற்கு எதிராக வட இந்திய அரசியல் தலைவர்கள் திரண்டனர். சாதாரண தெருச் சண்டையில் ஈடுபட்டாலே கைது செய்யும் போலீஸார், ராஜ் தாக்கரே விஷயத்தில் படா அமைதி காத்தனர். சரத்பவார் உள்ளிட்டோர் மண்ணின் மைந்தரான தாக்கரேவைக் காக்க முயன்றனர். ஆனால் எதிர்ப்புகள் வலுத்ததால் ஒரு வழியாக 13ம் தேதி கைது செய்யப்பட்டார் ராஜ் தாக்கரே. ஆனால் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு விட்டார். இப்போதைக்கு கலவரம் அடங்கியுள்ள நிலையிலும், இன்னும் நீரு பூத்த நெருப்பாக வட இந்தியர்களுக்கு எதிரான துவேஷம் மும்பையில் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை நிரூபிக்கும் விதமாக, மும்பை தீவிரவாதத் தாக்குதலில் எத்தனையோ பேர் இறந்த நிலையில் உயிரிழந்த மராத்திய காவல்துறையினருக்கு தான் அஞ்சலி செலுத்துவதாக இன வெறியுடன் பேசினார் ராஜ் தாக்கரே.

காந்தமால் கலவரம்

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த துறவி லட்சுமாணந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகஸ்ட் 24ம் தேதி கொல்லப்பட, ஒரிசாவில் வெடித்தது கலவரம். காந்தமால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிக் கூடங்கள் என கண்ணில் பட்டதையெல்லாம் வெறித்தனமாக தாக்கினர் சங் பரிவார் அமைப்பினர். மாவட்டமே பற்றி எரிந்தது. மதச் சார்பின்மையை கேள்விக்குறியாக்கி, அப்பாவி மக்களின் உயிர்களை வேள்வியாக்கிய வேதனை தினம். 30க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். கன்னியாஸ்திரி ஒருவரும் கற்பழிக்கப்பட்ட கொடூரமும் நடந்தது.

ஒரிசாவில் தொடங்கிய இந்த கலவரம் கர்நாடகத்திலும் பரவியது. மங்களூர் உள்ளிட்ட இடங்களில் சர்ச்சுகள் தாக்கப்பட்டன. தமிழகத்தையும் இந்த மதவாதம் தொட்டுப் பார்த்தது. ஆனால் காவல்துறையின் கடும் நடவடிக்கையால் சத்தமின்றி ஓய்ந்து போனது.

மும்பை தீவிரவாத தாக்குதல்

டிவியில் லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரே தீவிரவாதத் தாக்குதல் மும்பை தீவிரவாதத் தாக்குதலாகத்தான் இருக்க முடியும். அதுவும் 3 நாட்களுக்கு நேரடியாக ஒளிபரப்பி உலகம் முழுவதும் நம் பக்கம் ஈர்க்க வைத்து விட்டன இந்திய தொலைக்காட்சிகள். நியூயார்க் உலக வர்த்தக மையம், தீவிரவாதிகளால் விமானம் மூலம் தகர்க்கப்பட்டபோது எப்படி உலகம் அதிர்ந்ததோ அதே அளவிலான அதிர்ச்சியை, நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலும் ஏற்படுத்தியது. கடல் மார்க்கமாக ஊடுறுவிய தீவிரவாதிகள், படு சாவாதனமாக மும்பைக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக சுட்டு அப்பாவி மக்களை வீழ்த்திய கொடூரம் உலக மக்களை உறைய வைத்தது. தாஜ், டிரைடென்ட், ஓபராய் ஹோட்டல்கள் மற்றும் நாரிமன் ஹவுஸைப் பிடித்துக் கொண்டு அப்பாவிகளை குருவி சுடுவது போல சுட்டும், கையெறி குண்டுகளை வீசி ரணகளப்படுத்தியும் துவம்சம் செய்து விட்டனர் எதிரிகள்.
இந்திய கமாண்டோ படையினர் உள்ளே புகுந்த தீவிரவாதிகளுடன் உயிரைப் பணயம் வைத்து கடுமையாக போராடி, 9 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். முகம்மது அஜ்மல் அமீன் கஸாப் மட்டும் சிக்கினான்.

அப்பாவி மக்களுக்கு எதிராக நடந்த இந்த கொடூரத் தாக்குதல் நாட்டு மக்கள் கொந்தளித்தனர், நமது அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கை காறித் துப்பி குமுறினர். நாட்டு மக்களின் வேதனையில் வெண்ணீர் ஊற்றுவது போல, இதெல்லாம் சாதாரண தாக்குதல்தான் என்று கூறி வெறுப்பை வாரிக் கட்டிக் கொண்டார் மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல். மக்களின் வெறுப்பு அரசியல்வாதிகள் பக்கம் திரும்பியதாலும், எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனைக் கணைகள் காய்ச்சி எடுத்ததாலும், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோர் அடுத்தடுத்து பதவி விலகினார்.

இது மட்டுமா?


பெங்களூரில் 7 இடங்களில், அகமதாபாத்தில் 14 இடங்களில், தொடர்ந்து ஜெய்ப்பூரில், மாலேகானில், அஸ்ஸாமில் என தொடர் குண்டுவெடிப்புகள் நாட்டை உலுக்கின. சூரத்தில் குவியல் குவியலாக அடுத்தடுத்து வெடிக்காத வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மென்மையான இந்தியாவுக்கு 2008ம் ஆண்டு கண்டிப்பாக ஒரு தீவிரவாத ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

உலகம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பெரும் அலைகளை ஏற்படுத்திய ஒப்பந்தம்.

மன்மோகன் சிங் அரசுக்கு எமனாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட பரபரப்பு ஒப்பந்தம்.

அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்த அறிவிப்பு வெளியானதுமே இடதுசாரிகள் அதற்கு 'ரெட் கார்டு' போடத் தொடங்கினர். ஆனாலும் அவர்களிடம் பேசி சமாதானப்படுத்தி விடலாம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நினைத்தது. ஆனால் இடதுசாரிகளோ படு வீம்பாக இருந்ததால், அவர்களை மீறி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துணிந்தது மன்மோகன் சிங் அரசு. இதனால் கடுப்பான இடதுசாரிகள், ஜூலை 9ம் தேதி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். ஆனால் தக்க சமயத்தி்ல கை கொடுத்தனர் சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவும், அவரது அடிப்பொடி அமர்சிங்கும். கூடவே சிபு சோரனும் சேர, இடதுசாரிகள் வைத்த புள்ளியை, கமாவாக்கி ஜூலை 22ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது மன்மோகன் சிங் அரசு. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் பாஜக எம்.பிக்கள் பணக்கட்டுக்களை கொண்டு வந்து கொட்டியபோது நாடே பதறிப் போனது. அந்த விசாரணையும் இப்போது முடிந்து, குற்றம் சாட்டப்பட்ட அமர்சிங்கும், அகமது படேலும் அப்பாவிகள் என கூறி விட்டனர்.

இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைப் பரிசீலித்துப் பார்த்த சர்வதேச அணு சக்தி ஏஜென்சியும், என்.எஸ்.ஜி. அமைப்பும், இந்தியாவுக்குப் பச்சைக் கொடி காட்ட அணுத் தனிமையிலிருந்தும் விடுபட்டது இந்தியா. இப்படியாக பல்வேறு தடைகளைத் தாண்டி ஒரு வழியாக, இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

புஷ் மீது ஷூ வீச்சு

2008ம் ஆண்டின் முடிவில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஈராக்கில் கொடுக்கப்பட்ட மரியாதையைப் பார்த்து உலகமே அரண்டு போனது. பதவிக் காலத்தை முடிக்கும் புஷ், அதற்கு முன்பு கடைசி முறையாக ஈராக் செல்ல விரும்பினார். அதன்படி டிசம்பர் 15ம் தேதி பாக்தாத்துக்கும் சென்றார். பாக்தாத் அதிபர் அப்பாஸை சந்தித்த புஷ், அவருடன் இணைந்து செய்தியாளர்களையும் சந்தித்தார். அங்குதான் புஷ்ஷுக்கு அவமரியாதை நேர்ந்தது. நிருபர்களுடன் அமர்ந்திருந்த ஈராக் டிவி நிருபர் முன்டாசர் அல் ஜெய்தி, தனது ஷூக்களை எடுத்து ஆவேசமாக கத்தியபடி புஷ் மீது எறிய, படு லாவகமாக குனிந்து ஷூ வீச்சிலிருந்து தப்பினார் புஷ். மெரிக்கா உள்பட உலகமே இதைப் பார்த்து அதிர்ந்து போனது. ஆனால் ஷூவை வீசிய முன்டாசரோ, அரபு நாடுகளின் நாயகனாகி விட்டார். அவருக்கு உலகின் பல்வேறு முஸ்லீம் நாடுகளிலிருந்தும் பரிசுகள் குவிந்தன. லிபிய அதிபர் கடாபியின் மகள், முன்டாசரை மாவீரன் என்று புகழ்ந்தார். முன்டாசர் வீசிய ஷூவைத் தயாரித்த எகிப்து நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் அதே டைப் ஷூக்களைக் கேட்டு ஆர்டர்கள் குவி்ந்தன. முன்டாசரின் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் ஷூக்களை இலவசமாக சப்ளை செய்வதாக பல நிறுவனங்கள் அறிவித்தன. பதவியிலிருந்து விலகும் நேரத்தில் கிடைத்த இந்த வரவேற்பை நிச்சயம் புஷ் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார் என்பது நிச்சயம்.

வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல்

நவம்பர் 5 - வெள்ளை மாளிகையில் கருப்புப் புயல் குடி புகுந்த தினம். ஹாலிவுட் படங்களில் மட்டுமே கருப்பர் இன அதிபரை கண்டு ரசித்து வந்த அமெரிக்கா, நிஜமாகவே ஒரு கருப்பர் இனத்தவரை அதிபராகத் தேர்வு செய்து பெருமைப்பட்டுக் கொண்ட தினம். உலகெங்கிலும் உள்ள ஒட்டுமொத்த கருப்பர் இனத்தவருக்கும் பெருமை தேடித் தரும் வகையில் அதிபர் தேர்தலில் வென்றார் பாரக் ஓபாமா.

விளையாட்டுத் துறை

வாராது வந்த மாமணியாக ஒலிம்பிக்கில் நமக்கு தங்கப் பதக்க கிடைத்த ஆண்டாச்சே, சும்மாவா!

ஒலிம்பிக்கில் இந்தியா அசத்திய ஆண்டு, ஐபிஎல் டுவென்டி20 போட்டி மூலம் கிரிக்கெட் உலகை இந்தியா பிரமிக்க வைத்த ஆண்டு, பேட்மிண்டனில் சாய்னா நேஹ்வால் உலக அரங்கில் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறிய ஆண்டு, கும்ப்ளே, கங்குலி ஆகிய ஜாம்பவான்ள் ஓய்வு பெற்ற ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் 12 ஆயிரம் ரன்களைத் தொட்ட ஆண்டு என 2008ம் ஆண்டு இந்திய விளையாட்டுத் துறைக்கு பெருமிதம் தந்த ஆண்டு.

ஒலிம்பிக்கில் முத்திரை ..

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தங்கம் வென்று இந்தியாவின் நூற்றாண்டு கால கனவை நனவாக்கினார். மேலும் மல்யுத்தத்தில் சுஷில்குமார், குத்துச்சண்டையில் விஜேந்தர் குமார் ஆகியோர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர். இதுவரை இந்தியாவுக்குக் கிடைத்திராத கெளரவ சாதனை இது என்பதால் ஒட்டு மொத்த இந்தியாவும் குதூகளித்து சந்தோஷப்பட்டது.

சாய்னாவின் ரேங்க் சாதனை ...

இந்திய பேட்மிண்டன் துறைக்கும் 2008ம் ஆண்டு மிகப் பெரிய ஆண்டாக அமைந்தது. ஒலிம்பிக்கில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால், காலிறுதி வரை தகுதி பெற்று இந்தியாவுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தினார். பதக்க வாய்ப்பு நழுவினாலும் கூட சாய்னாவின் திறமையான ஆட்டம் அத்தனை இந்தியர்களையும் கவர்ந்து விட்டது. ஒலி்ம்பிக்கி்ல் பதக்கம் போனாலும் கூட, சைனீஸ் தைபே கிரான்ட்பிரி, ஜூனியர் காமன்வெல்த், உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றார் சாய்னா.

இதற்கெல்லாம் உச்சமாக, உலக தரவரிசைப் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்து புதிய வரலாறும் படைத்தார். இந்திய வீராங்கனை ஒருவர் தர வரிசைப் பட்டியலில் இந்த அளவுக்கு உயர்வு பெற்றது இதுவே முதல் முறையாகும். சாய்னாவின் தொடர் சாதனைகளால் சிறந்த வளரும் வீராங்கனையாக உலக பேட்மிண்டன் சம்மேளனம், சாய்னாவை தேர்வு செய்தது.

ஐபிஎல் திருவிழா ..

கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், உலக விளையாட்டு அரங்கிலும் பெரும் சலசலப்பையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐபிஎல் டுவென்டி 20 போட்டித் தொடர். கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து வீரர்களை ஏலம் எடுத்த 8 இந்திய அணிகள், இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றன. அதிகபட்சமாக இந்திய கேப்டன் டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 6 கோடிக்கு ஏலம் எடுத்தது. உலக அளவில் ஜாம்பவான் வீரர்கள் பல்வேறு அணிகளில் இடம் பெற்றனர். இறுதிப் போட்டியில் சென்னை அணியும், ஷான் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் வார்னே அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. உலகிலேயே மிகப் பணக்கார அமைப்பு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய இந்தப் போட்டித் தொடரின் ஆடம்பரம், பிரமாண்டம் நிரூபித்தது.

சச்சின் 12,000 ...

சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கருக்கு 2008ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. காரணம், இந்த ஆண்டில்தான் அவர் லாராவின் உலக சாதனையை ஒரு வழியாக முறியடித்தார். அக்டோபர் 17ம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது லாரா வைத்திருந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் சாதனையை (11,953) கடந்தார் சச்சின். 12 ஆயிரம் ரன்களைத் தற்போது தாண்டி தொடர்ந்து சாதனை தாகத்துடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்கிறார் சச்சின். உலக அளவில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சச்சின் குவித்து வைத்துள்ள சாதனை ரன்களை தாண்ட மற்ற வீரர்களுக்கு ரொம்ப காலமாகும்.

ஜாம்பவான்களுக்கு டாடா ...

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளேவும், செளரவ் கங்குலியும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். இந்திய பந்து வீச்சாளர்களிலேயே அதிக அளவிலான விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. 619 விக்கெட்களை வீழ்த்திய சாதனைக்குரியவர் கும்ப்ளே. நவம்பர் மாதம் நடந்த இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான டெல்லி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றுக் கொண்டார் கும்ப்ளே. அருமையான கிரிக்கெட் வீரர், நிஜமான ஜென்டில்மேன் என சக கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டவர் கும்ப்ளே. அவரது நிழலுக்கு அருகில் கூட இன்னொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் யாரும் இல்லை.

கும்ப்ளேவைப் போலவே பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரரான கங்குலியும் இதே ஆண்டில்தான் ஓய்வு பெற்றார். தனது கடைசிக்கால கிரிக்கெட்டின்போது பல கசப்பான அனுபவங்களை சந்தித்திருந்தாலும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கங்குலி இருந்தபோது நிஜமாகவே இந்திய அணியைப் பார்த்த மற்ற அணிகள் மிரண்டது நிஜம். டோணிக்கு முன்பே உலக கிரிக்கெட் அணிகளின் சிம்ம சொப்பனமாக விளங்கியவர் கங்குலி. 12 ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடிய கங்குலி, நவம்பர் 10ம் தேதி நடந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

சரிந்த சானியா ..

இந்திய டென்னிஸின் இளம் புயல் சானியா மிர்ஸாவுக்கு இந்த ஆண்டு நிச்சயம் நல்ல ஆண்டு இல்லை. தொடர் காயத்தால் 31வது இடத்திலிருந்து 100வது ரேங்குக்கு இறங்கிப் போய் விட்டார் சானியா. வருடத்தின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய ஒபன் போட்டியில் 3வது சுற்று வரை முன்னேறியதே அவர் செய்த ஒரே சாதனை. அதன் பின்னர் தொடர்ந்து அவர் காயத்தால் அவதிப்பட்டு வந்ததால், போட்டிகள் எதிலும் பங்கேற்கவில்லை. இப்படி காயத்தால் தேக்க நிலையைக் கண்ட சானியா 2009ம் ஆண்டில்தான் தனது வெற்றிக் கணக்கை துவக்குவார் எனத் தெரிகிறது.

அடித்த சிங் .. அழுத சாந்த் ...

டிரவுசர் போட்ட நர்சரி பள்ளிச் சிறார்கள் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹர்பஜன் சிங் அடிக்க, ஸ்ரீசாந்த் தேம்பித் தேம்பி அழுததை டிவியில் பார்த்தபோது இந்தியாவே 'கலங்கித்தான்' போனது. ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணிக்காக ஆடினார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்தார் ஸ்ரீசாந்த். லீக் போட்டியின்போது மும்பை அணியை பஞ்சாப் தோற்கடித்தது. அப்போது அணிக்குத் தலைமை தாங்கிய ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஜாலியாக வார, கடுப்பான சிங், சாந்த்துக்கு விட்டார் ஒரு பளார் அறை. இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீசாந்த், மைதானத்தில் நின்றபிட தேம்பித் தேம்பி அழ ஒட்டு மொத்த ஸ்டேடியமும் உச் கொட்டியது. சக வீரர்கள் தேற்றிப் பார்த்தும், அடக்க முடியாமல் ஸ்ரீசாந்த் அழுததுதான், விளையாட்டு உலகில் இந்த ஆண்டின் உருக்கமான சம்பவம் எனலாம். ஆனால் அதன் பின்னர் அவர் அண்ணன், நான் தம்பி, அவர் அடிக்கலாம் என்ற ரேஞ்சுக்கு ஸ்ரீசாந்த் பேசி சமாதானமாகிக் கொண்டார்.

'குப்புறடித்த' ஹாக்கி ...

இந்திய ஹாக்கி அணிக்கு 2008ம் ஆண்டு ஏழரை சனிக் காலம்.

இதுவரை இல்லாத பெரும் கேவலமாக, ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறத் தவறியது இந்திய ஹாக்கி அணி. ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கம் வென்ற பெருமைக்குரியது நமது ஹாக்கி அணி. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற தவறியபோது அதைக் கண்டு வேதனைப்பட்டனர் இந்திய ஹாக்கி ரசிகர்கள். இதை விட மோசமான சம்பவம் ஒன்றையும் இந்திய ஹாக்கி சம்மேளனம் சந்தித்தது. அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான அணியில் இடம் பெறுவற்காக இந்திய ஹாக்கி சம்மேளன செயலாளர் ஜோதிகுமரனிடம், டெல்லி வீரர் ஒருவர் லஞ்சம் கொடுத்தது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஜோதிகுமரன் ராஜினாமா செய்தார். இந்திய ஹாக்கி சம்மேளனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்து விட்டது. இதற்கு மேல் இந்திய ஹாக்கி அணியின் 2008ம் ஆண்டு செயல்பாடு குறித்து விசேஷமாக கூற எதுவும் இல்லை.

சினிமா

தமிழ் சினிமா உலகத்தை பொறுத்தவரை 2008ம் ஆண்டு சிறப்பான ஆண்டாகவே இருந்திருக்கிறது. 2007ம் ஆண்டில் வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 137. இது 2008ம் ஆண்டில் 180 ஆக அதிகரித்திருந்தது. இதில் நேரடி படங்களின் எண்ணிக்கை 2007ல் 107. இது 2008ல் 119ஆக உயர்ந்துள்ளது. இதேபோல 2007ல் 30 மொழிமாற்ற படங்கள் மட்டுமே ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. ஆனால் 2008ல் 61 மொழிமாற்ற படங்கள் வந்துள்ளன.

2008ல் வெளியான படங்கள்

1. அஞ்சாதே

2. அசோகா

3. அபியும் நானும்

4. அய்யா வழி

5. அரசாங்கம்

6. அலிபாபா

7. அழகு நிலையம்

8. அழைப்பிதழ்

9. அறை எண் 305ல் கடவுள்

10. ஆடும் கூத்து

11. ஆயுதம் செய்வோம்

12. இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

13. இயக்கம்

14. இன்பா

15. இனி வரும் காலம்

16. உத்தரவின்றி உள்ளே வா

17. உருகுதே

18. உளியின் ஓசை

19. உனக்காக

20. உன்னை நான்

21. எல்லாம் அவன் செயல்

22. எழுதிய தாரடி

23. ஏகன்

24. ஃஅக்கு

25. கட்டுவிரியன்

26. கண்ணும் கண்ணும்

27. கத்திக்கப்பல்

28. காசிமேடு கோவிந்தன்

29. காதல் என்றால் என்ன

30. காதல் கடிதம்

31. காதல் வானிலே

32. காத்தவராயன்

33. காலைப்பனி

34. காளை

35. கி.மு.,

36. குசேலன்

37. குருவி

38. கொடைக்கானல்

39. சக்கரகட்டி

40. சக்ரவியூகம்

41. சண்டை

42. சத்யம்

43. சந்தோஷ் சுப்ரமணியம்

44. சரோஜா

45. சாதுமிரண்டா

46. சாமிடா

47. சிங்கக்குட்டி

48. சில நேரங்களில்

49. சிலம்பாட்டம்

50. சுட்டபழம்

51. சுப்ரமணியபுரம்

52. சூர்யா

53. சேவல்

54. தங்கம்

55. தசாவதாரம்

56. தரகு

57. தனம்

58. தாம்துõம்

59. தித்திக்கும் இளமை

60. திருதிருடா

61. திருவண்ணாமலை

62. தீக்குச்சி

63. தீயவன்

64. துரை

65. துõண்டில்

66. தொடக்கம்

67. தோட்டா

68. தோழா

69. நடிகை

70. நாயகன்

71. நெஞ்சத்தை கிள்ளாதே

72. நேபாளி

73. நேற்று இன்று நாளை

74. பஞ்சாமிர்தம்

75. பச்சை நிறமே

76. பத்து பத்து

77. பந்தயம்

78. பழனி

79. பட்டைய கிளப்பு

80. பாண்டி

81. பிடிச்சிருக்கு

82. பிரிவோம் சந்திப்போம்

83. பீமா

84. புதுசு கண்ணா புதுசு

85. புதுப்பாண்டி

86. பூ

87. பூச்சி

88. பொம்மலாட்டம்

89. பொய் சொல்ல போறோம்

90. பொன் மகள் வந்தாள்

91. மகேஷ் சரண்யா மற்றும் பலர்

92. மதுரை பொண்ணு சென்னை பையன்

93. மலரினும் மெல்லிய

94. மாணவ மாணவிகள்

95. மாணவன் நினைத்தால்

96. முதல் முதல் முதல் வரை

97. முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு

98. மோகம்

99. யாரடி நீ மோகினி

100. ரகசிய சினேகிதனே

101. ராமன் தேடிய சீதை

102. வசூல்

103. வம்புச்சண்டை

104. வல்லமை தாராயோ

105. வழக்கறிஞர் அர்ச்சனா

106. வள்ளுவன் வாசுகி

107. வாரணம் ஆயிரம்

108. வாழ்த்துகள்

109. வாழ்வெல்லாம் வசந்தம்

110. விளையாட்டு

111. வெள்ளித்திரை

112. வேதா

113. வேள்வி

114. வைத்தீஸ்வரன்

115. ஜெயங்கொண்டான்

மறைந்த பிரபலங்கள்..:

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் கலைஞர்கள் சிலர் இந்த ஆண்டில் மறைந்து திரையுலகை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தினர்.

பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் மறைவு அனைத்து திரை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 1000 படங்களுக்கு மேல் நடித்த அற்புதமான நடிகரான நம்பியார் உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகத்தால், நவம்பர் 19ம் தேதி மரணமடைந்தார்.

மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதர், அக்டோபர் 20ம் தேதி மரணமடைந்தார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் காதலுக்குப் புது மொழியும், புது வடிவும் கொடுத்த சிறந்த இயக்குநர் ஆவார்.

எழுத்தாளர், அறிவாளி, அறிவியலாளர், தமிழார்வலர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டா சுஜாதாவும் இந்த ஆண்டுதான் மறைந்தார். பிப்ரவரி 27ம் தேதி சுஜாதா இறந்தபோது, எழுத்துலகும், இலக்கிய உலகும், திரையுலகும் சேர்ந்து வருந்தின.

வித்தியாசமான வில்லனாகவும், சிறந்த குணச்சித்திர நடிகராகவும் அறியப்பட்ட ரகுவரன் மார்ச் 19ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

அதேபோல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஜீவா, ரஷ்யாவுக்கு தாம் தூம் படத்தின் ஷூட்டிங்குக்காக போன இடத்தில் உயிரிழந்தார்.

நடிகர் பாண்டியன், குணால், குன்னக்குடி வைத்தியநாதன், பூரணம் விஸ்வநாதன், தேனி குஞ்சரம்மாள், தியாகராஜ பாகவதரின் மனைவி ராஜாம்பாள், பிரபு தேவாவின் மகன் விஷால், பழம்பெரும் தெலுங்கு நடிகர் சோபன்பாபு ஆகியோரும் 2008ல் மறைந்த திரையுலகினர்.