Tuesday, December 25, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - திரைவிமர்சனம்


நாம் வாழ்க்கையில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை படம் எடுத்தால், எப்படி இருக்கும் என்பதை இப்படத்தை காண்பதின் மூலமாக அறியலாம். எந்த வித ஆர்பாட்டம் இல்லாமல், தினசரி வாழ்க்கை எப்படி இருக்குமே, அதே நிலையில் திரைக்கதை அமைத்தது தான் இப்படத்தின் வெற்றி.


திருமணமே வேண்டாம் என்று இருந்த விஜய் சேதுபதிக்கு, தொழிலிலும் பல பிரச்சனை. ஓர் ஆண்டிற்கு முன் அறிமுகமாகி காயத்ரி உடன் காதல். எப்போதும் போல் காதலில் பிரச்சனை. எல்லாவற்றையும் சமாளித்து திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போகிறார். ஏதோ ஒரு நிலையில் கிழே விழுந்து தலையில் அடி பட, கடந்த ஒரு ஆண்டின் நிகழ்ந்த அனைத்து விஷயங்களும் மறந்து போகிறது. அதே நேரத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் அப்போது நடந்த நிகழ்வுகளும் மறந்து போகிறது. சொன்ன ஒரே வாக்கியத்தை ஒவ்வொரு ஐந்து நிமிடமும் வருகிறது.


·         நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன்.
அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? அதுக்கப்புறம் என்னாச்சி? என்று கேட்டபடியே "பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? மெடுலாவில அடிபட்டிருக்கும் அதான். இப்ப ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்"

இந்த சூழ்நிலையில் நண்பர்கள் ஆன ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள் மூன்று பேரும் எப்படியாவது திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து, சேதுபதியை அவருடைய வீட்டிற்கு கூட்டி செல்கின்றனர். திருமணம் நடந்ததா இல்லையா? சேதுபதி குணமணர இல்லையா? என்பதே மீதி கதை. சொல்ல போனால் இப்படத்தின் நாயகர்கள் மொத்தம் நான்கு பேர் இவர்களையும் சேர்த்து. ஒவ்வொரு இடத்திலும் சேதுபதியை விட, இந்த மூன்று பேரும்  தான்  இக்கதையின் தூண்கள். மேல சொன்ன வாக்கியத்தை தவிர இன்னும் இரண்டு வாக்கியங்கள் மறுபடி மறுபடியும் வருகிறது.


·         அப்ப ... யாருடா இந்த பொண்ணு...பேய் மாதிரி இருக்கு makeup போட்டுகிட்டு....
·         நான் சொன்ன,நீ கேப்பிய கேக்கபாட்டிய  - இந்த டைலாக்கின் அடிப்படை என்னவென்று பார்த்தால், நமக்கு செம டென்ஷன் ஆயிடும்.

இதை தவிர ரொம்ப சீன் போட்டு சொல்லும் பக்சின் டயலாக்: 
·         காதல்ங்கிறது ஆழ்மனசுல அடிச்ச ஆணி மாதிரி. மெடுலா ஆப்லங்கேட்டால அடிபட்டாலும் மறக்காது!.. ஆனால் இந்த டயலாக் வீணாகி போகும் நிலையில்,கட்டும் இடம் அருமை.



மிக சீரியஸ் ஆனா கதையை, நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் கொடுத்த இயக்குனர் பாலாஜி தரணிதரணுக்கு என் வாழ்த்துக்கள்.  தமிழ் திரைவுலகில் இப்படம் முக்கிய இடத்தை பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

Wednesday, December 05, 2012

ஒ மை கோட் (Oh My God) - 2012 - ஹிந்தி - திரைவிமர்சனம்



சமீபத்தில் என்னை பெரிதும் கவர்ந்த பட்டியலில் முதலாவதாக இருந்த திரைப்படம் இது. கதை என்று பார்த்தால், பூகம்பத்தால் இடிந்து போன தான் கடைக்காக கடவுள் மீது வழக்கு பதிவு செய்து எவ்வாறு வெல்கிறார். முதல் இருவது நிமிடம் பழைய ஹிந்தி படங்களை காணும் பிம்பம் இருந்தாலும், அடுத்த நிமிடம் முதல் சரவெடியாய் வெடிக்கும். திரைப்படம் முழுவதும் கடவுள் மீது வைத்து இருக்கும் மூடநம்பிக்கையும், கடவுள் பெயரை சொல்லி கொண்டு ஏமாற்றும் போலி சாமியார்களை சுத்தியலை தலையில் வைத்து அடித்தார் போல் ஒவ்வொரு வசனமும் அமைக்கப்பட்டு இருக்கும்.


இயற்கை சம்பவங்களால் ஏற்படும் நஷ்டத்திற்கு, இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பாக முடியாது என்று கூறுகின்றனர். சரி, அப்படி என்றால் கடவுளிடம் இருந்து எனக்கான இழப்பீட்டு தொகையை வாங்கி கொடுங்கள்.

கடவுளுக்கு அளிக்க படும் சேவை வியாபாரம் என்று கூறுகிறார்.
ஆம் அது வியாபாரம் தான்.. நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும்  முதலில் பார்க்கிங் செலவு, துரித தரிசனத்துக்கு ஒரு செலவு, பூ, விளக்கு, உண்டியல் என்று பல செலவுகள். கடவுளை காண்பது என்பது, கண்காட்சிக்கு சென்று ஒரு பொம்மை காண்பது போல் வியாபாரம் ஆகி விட்டது. கடவுளை பெயரை சொல்லி கொண்டு இருக்கும் இவர்களுக்கு வரிகள் கிடையாது. இதில் எங்கு சேவை உள்ளது? இந்த வியாபாரத்திற்க்கு மட்டும் தான் சுணக்கம் என்பதே கிடையாது. சொல்ல போனால், உலக அளவில் பொருளாதார சுணக்கம் வந்த போது, செழிப்போடு வாழ்ந்தார்கள்.

நானும் இன்சூரன்ஸ்க்கு பணம் செலுத்துவது போல், கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் செலுத்தி உள்ளேன்.

உங்கள் பிரச்சனை கடவுளிடம் தானே? 
ஆம். 
அப்படி என்றால் கடவுளிடம் சென்று இழப்பிட்டு தொகையை கேளுங்கள். ஏன் கோவில் நிர்வாகத்திடம் கேட்கிறீர்கள்... 
அப்படியா? சரி நீங்கள் வீட்டிற்கு என்ற நிர்வாகம் மின் விநியோகம் செய்கிறது? 
ரிலையன்ஸ். 
சரி, உங்கள் வீட்டில் மின் பிரச்சனை என்றால் அம்பானியிடமா முறை இடுவிர்கள் அல்லது மின் விநியோக நிர்வாம்/அதிகாரி இடம் தான் முறை இடுவீர்கள்.

இவர்கள் சாமியார்கள். 
ஆம் இவர்கள் சாமியார்கள் தான், அதிகாரிகள் அல்ல. அதிகாரிகள் படித்தவர்கள். இவர்கள் வியாபாரிகள். ஏன் என்றால் இவர்கள் கடவுளுக்கு பல இடத்தில் பல்வேறு நிறுவனங்களை நடத்துபவர்கள் 

கடவுள் என்று கூறுகிறிர்கள், எப்படி ப்ளேசர்? 
நீங்கள் மட்டும் தான் காலத்தின் படி மாறுவீர்கள? நானும் தான் காலத்தின் படி மாறுகிறேன்.


இதே போல் திரைப்படம் முழுவதும் சிந்திக்க வைக்கும் வசனங்கள். ஒரு நாத்திகவாதியாழும் சிந்திக்க முடியாத மற்றும் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதே மட்டுமே எடுக்க வேண்டும் என்ற கூர்மையான வார்த்தைகள். வாழ்த்துக்கள் வசன இயக்குனருக்கு. இவர் தான் படத்தின் முதல் பலம். கடவுளிடம் இழப்பிட்டு தொகை கேட்டு வழக்கு தொடும் நபராக பரேஷ் ராவல். அருமையான நடிப்பு. நம்மூர் பிரகாஷ்ராஜ் போல்  எல்லாவிதமான உணர்ச்சிகளும் நினைத்த மாத்திரத்தில் மாற்றும் நடிகர். இவர் படத்தின் இரண்டாவது பலம். அக்ஷய்  குமார் கடவுளாக. இவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். எப்போதும் போல் நம்ப முடியாத ஒரு சில காட்சிகளுடன். படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், இப்படி அருமையான கதையின் முன்பு, அது பெரிதாக தெரியவில்லை.


இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். இப்படம் வெளிவந்த உடன், எப்போதும் கதையின் நாயகருக்கும், தயாரிப்பளருக்கும் பல மிரட்டல்கள். காவல் துறை பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு சென்றது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இக்கதையை தேர்ந்து எடுத்து இயக்கியவருக்கும், தயாரித்தவருக்கும் என் பூங்கொத்து.

Tuesday, December 04, 2012

22 பிமேல் கோட்டயம் - 22 Female Kottayam - திரைவிமர்சனம் - மலையாளம்



வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள் சமூகத்தில் எப்படி ஏமாற்ற படுகிறார்கள். அதே போல் எப்படி அவர்கள் அதை துடைத்து எறிந்து விட்டு, வாழ்க்கையில் பயணிக்கிறார்கள் என்பதை காட்டும் இரண்டாவது படம் 22 பிமேல் கோட்டயம் (22 Female Kottayam). சமூகத்தில் எங்கு எல்லாம் தப்பு செய்தால், சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று தெரிந்து கொண்டு, அங்கு தப்பு செய்பவர்களிடம் சரியாக வந்து மாட்டி கொள்வது தான் தலைவிதி. அந்த இடத்தில் சிக்கி கொள்ளும் பெண்ணின் கதை தான் இப்படம்.



பெங்களூரில் ஒரு தனியார் மருத்துவத்துறையில் வேலை பார்க்கும் பெண்ணாக ரீமா கல்லிங்கள். கனடா சென்று வேலை பார்க்கும் லட்சியத்துடன் இருக்கும் ஒரு மலையாள பெண். கனடா செல்வதற்கு தேவையான விசா நடைமுறைகளை செய்து தரும் ஒரு தனியார் நிறுவனத்திற்க்கு செல்ல அங்கு பாசிலை காண்கிறாள். இருவருக்கும் காதல் வர, ஒரே வீட்டில் குடி இருக்கின்றனர். காதல் காரணமாக இருவரும் உடலோடு சேர்கின்றனர். பாசிலின் மேல் அதிகாரியாக பிரதாப் போத்தன். ஏதே ஒரு பிரச்சனையில் பாசில் தலை மறைவாக, வீட்டில் தனியாக இருக்கும் ரீமை, பிரதாப் வன்மையாக புணர்கிறார். ரீமா எந்த பிரச்சனையும் வேண்டும் என்று கூற பாசிலும் பிரதாப்பை விட்டு விடுகிறார். காரணம் கனடா செல்ல விரும்பும் பெண்கள், காவல் நிலையத்தில் முதல் அறிக்கை பதிய மாட்டார்கள். அப்படி பதிவு செய்தால், அவர்கள் எந்த ஊருக்கும் செல்ல இயலாது. சில நாட்களில் ரீமா உடல் நலம் தேறி வர, பாசில் பிரதாப்க்கு ஒரு செய்தி அனுப்புகிறார். ரீமா உடல் நிலை சரியாகி விட்டது என்று. அந்த நிமிடம் தான் பிரதாப் மற்றும் பாசில் இருவரும் சேர்ந்தே இந்த வேலை செய்கின்றனர் என்று நமக்கு தெரிய வருகிறது. மீண்டும் அதே வீட்டில் நீமா தனியாக இருக்கும் போது, பிரதாப் வந்து மறுபடியும் புணர்கிறார். இப்போது ரீமா பிரதாப்பை பழி வாங்க வேண்டும் என்று பாசிலிடம் கூற, பாசில் மற்றும் பிரதாப் இருவரும் சேர்ந்து ரீமாவை போதை வழக்கில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்புகின்றனர். சிறையில் ஒரு தமிழ் பெண்ணின் நட்பு கிடைத்து, பாசில் மற்றும் பிரதாப்பின் பின்னணி பற்றி தெரிந்து கொள்கிறாள். பழி வாங்க வேண்டும் என்ற உணர்ச்சி மேலோங்க, தமிழ் பெண்ணிடம் உதவி கேட்கிறாள். சிறையில் இருந்து வெளியே வந்து, சில பேரின் உதவியுடன் இருவரையும் வித்தியாசமாக பழி தீர்த்து, தன் லட்சித்தியத்தை நோக்கி பயணிக்கிறாள்.


கதை என்று பார்த்தால், பழி வாங்கும் பெண் என்று வந்தாலும், திரைக்கதை கொடுத்தவிதம் விதம் தான் படத்தை உயர்த்தி விடுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் எதாவது ஒரு விதத்தில் முக்கிய பங்களிப்பு கொடுப்பதாக அமைக்கபட்டு இருக்கும். குறிப்பாக சிறையில் சந்திக்கும் தமிழ் பெண்ணின் கதை, மற்றும் அவள் கொடுக்கும் யோசனைகள் என்று அப்பெண்ணின் கதாப்பாத்திரத்தை உயர்த்தி காட்டி இருப்பார் இயக்குனர். அதே போல் வசனங்களுக்கு இப்படத்தில் முக்கிய இடம் உண்டு. பிரதாப் ஏதோ காபி கேட்பது போல், உடலுறவு உன்னுடன் வைத்து கொள்ளவா? என்று கேட்பதும், தமிழ் பெண், குழந்தையை தான் காப்பற்ற வேண்டும் என்று சொல்லும் இடங்கள் ஆகட்டும், வசன இயக்குனர் இப்படத்தில் நின்று விடுகிறார். பச்சைக்கிளி முத்துசாரம் படத்தை பார்த்த பின், சென்னையில் தினசரி புறநகர் இரயிலில் பயணம் கொள்ளும் ஆண்கள் பல பேர், யோசித்ததாக ஒரு தகவல் உண்டு. அதே போல் தான் இப்படமும், வேலைக்கு செல்லும் பெண்களை கண்டிப்பாக ஒரு முறை சிந்திக்க வைக்கும்.  


வாழ்க்கையில் பிரச்சனைகள் எப்படி, எங்கு இருந்து வரும், யாரால் வரும் என்பதை சிந்திக்க இயலாது. வந்தால் முடிந்தவரை சரி செய்து விட்டு, நம் பயணத்தை தொடர வேண்டியது தான்.

Monday, December 03, 2012

ENGLIஷ் VINGLIஷ் - திரைவிமர்சனம்


குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பெண்கள் ஆகட்டும், வெளியில் சென்று வேலை செய்யும் பெண்கள் ஆகட்டும் இந்த சமுதாயத்தில் எவ்வாறு பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பதையும், அதை புறம் தள்ளிவிட்டு அவர்கள் எவ்வாறு சாதிக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லும் படங்கள் இவை. அதில் முதல் படமாக ENGLIஷ் VINGLIஷ்


குடும்பத்தில் வேலை பார்க்கும் பெண்ணாக ஸ்ரீதேவி. பல வருடங்களுக்கு பின்பு திரையில் என் சிறுவயதில் கண்ட அதே ஸ்ரீதேவியாக. பெண்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்து கொண்டாலும், அவர்களுக்கு என்று சுயமரியாதை, உணர்ச்சிகள் உண்டு. இவைகள்  இரண்டும் கிடைக்கமால் போனதால், எப்படி மனதில் கஷ்டபடுகிறார்கள் என்பதை பாமரனுக்கும் புரியும் விதத்தில் கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றி.  குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ஆங்கிலம் என்ற மொழி தெரியாத காரணத்தால், பல இடங்களில் சுயமரியாதை இழக்க நேருகிறது. சுவையுடன் கூடிய லட்டு செய்யும் திறமை இருந்தாலும், அங்கு மதிக்க படவில்லை. இந்த சூழ்நிலையில் ஆங்கிலம் மட்டுமே பேசும் இடமான அமெரிக்காவிற்கு வர வேண்டிய சூழல் அதுவும் அக்காவின் மகளுக்கு திருமணத்திற்காக. ஸ்ரீதேவி ஆங்கிலம் தெரியாமல் அமெரிக்கா சென்று, எவ்வாறு அந்த சூழ்நிலையை கையாண்டார் என்பதே மீதி கதை. 

ஒவ்வொரு முறையும் ஸ்ரீதேவியை அவர்கள் குழந்தைகள், கேலி செய்யும் நேரத்தில் அவருடைய  மனநிலையை தன் நடிப்பில் மூலம்  வெளிகாட்டும் நேரத்தில் தான், இது நாள் வரை ஸ்ரீதேவியை ஏன் தமிழ் திரையுலகம் மறந்தது என்ற கேள்வி எழுகிறது. 


அஜித் என்ற பெரிய மாஸ் நடிகர், சின்ன பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் என்ற பெருமை இருந்தாலும் தூதரக அதிகாரி முன்பு பேசும் வசனங்கள் என்னால் அதிகம் தான். 

அமெரிக்காவின் நியூயார்க் அழகாய் கண் முன்னால் கட்டபடுகிறது. இதற்காக ஒளி இயக்குனருக்கு ஒரு பூங்கொத்து.


சின்ன சின்ன கதாப்பாத்திரங்களாக பிரான்ச் நடிகர், ஸ்பானிஷ் பேசும் மெக்ஸிகோ பெண்மணி, ஆங்கிலம் கற்று தரும் அமெரிக்கா  ஆசிரியர், சைனீஸ் பெண்மணி, தமிழ் பேசும் ஒரு நபர், இந்தி பேசும் நபர், கருப்பு இனத்தை சேர்ந்த ஒரு மனிதர். இவர்கள் அனைவரும், தன் நிலைமையை அறிந்து நடித்து இருப்பார்கள். யாருமே தேவை இல்லை என்ற நிலை வராமல் இயக்குனர் அவர்களை அமைத்து இருப்பார்.


பிரியா ஆனந்த் - சில படத்தில் பார்த்து இருந்தாலும், இப்படத்தில் மட்டுமே ரசிக்கும் விதமாக ஆடை அலங்காரம் அமைந்து இருந்த என்பது உண்மை.

குடும்பம்கறது அன்பு மற்றும் மரியாதை... நம்மை நாமே நேசிக்கலனே எப்படி? நம்மை நாம நேசிக்க ஆரம்பிச்ச நம்ம பழைய வாழ்க்கையை நேசிக்க தோணும் - இப்படி பல இடங்களில் வசனங்கள் ஷார்ப்.

மொத்தத்தில் இப்படம் குடும்ப பெண்களுக்கு ஒரு ஊக்கம் அளிக்கும் ஒரு மருந்து தான்.

Thursday, November 29, 2012

ஆர்கோ - ARGO - 2012 - ஆங்கிலம் - திரைவிமர்சனம்


திரைவிமர்சனங்கள் எழுதி பல நாட்கள் ஆகி விட்ட நிலையில், என்னை சமீபத்தில் வியப்பூட்டிய சில திரைப்படங்களை பற்றி எழுதிய ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது நான் இருக்கிறேன். அதில் முதலாவது படம் ARGO.



ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டின் உள்ளே போவதற்கு மற்றும் வெளியே வருவதற்கும் பல வழிமுறைகள் இருக்கின்றன. அதற்கு முதலில் வருவது விசா. வெளிநாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு விசா பற்றி தெரிந்து இருக்கும். விசா அல்லது அதற்கு சமமான பத்திரங்கள் கையில் இல்லாமல் போனால், அந்த நாட்டின் படி நாம் ஒரு குற்றவாளி. நாம் நாட்டில் சிறையில் சென்றாலே, படு கஷ்டம். வெளி நாட்டு சிறை என்பதால் கேட்டவே வேண்டாம். நரகத்தில் என்ன செய்வார்களோ, அதை உயிருடன் இருக்கும் போது அதை அனுபவிக்க நேரிடும். சில சமயங்களில் தீவிரவாதி என்று நினைத்து முதலில் கொன்று விட்டு, அதன் பிறகு தான் இவன் யார் என்று கேள்வியே கேட்பார்கள்.  வெளிநாட்டில் வசிக்கும் வேறு நாடு மக்களுக்கு உள்ளே செல்ல மற்றும் வெளியே வர இருக்கும் பிரச்சனைகள் நன்கு தெரிந்து இருக்கும். நானும் அந்த பார்வையில் தான் பார்த்தேன். அதனால் தான் என்னவோ, திரைகதை முடிந்தும் என்னில் பல கேள்விகள். ஆனால் விசா நடை முறை பற்றி தெரியாத மக்களுக்கும் இப்படம் பிடித்து போகும். ஏனென்றால் திரைகதை அமைத்த விதம் அப்படி. சரி படத்திற்கு செல்வோம்.



1979ம்  ஆண்டு டேஹ்ரன், ஈரான் மாநிலத்தில் இருக்கும் அமெரிக்கா தூதரகத்தில் 50க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். எப்போதும் போல் அமெரிக்கா மற்றும் ஈரான் அரசியல் பிரச்சனை காரணமாக, ஈரான் மக்கள் அமெரிக்கா தூதரகத்தில் நுழைத்து பல அமெரிக்கர்களை சிறை பிடிக்கின்றனர். அப்போது அங்கு இருந்து 6 பேர் தப்பிக்கின்றனர். சிறை பிடிக்கபட்ட அனைவரும் பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர்ஈரான் முழுவதும் பல இடங்களில் கலவரங்கள். எங்கு பார்த்தாலும் இராணுவம் கையில் தூப்பாக்கி உடன். மக்கள் அனைவரும் அமெரிக்காவினர் மீது கோபமாக இருக்கின்றனர். தப்பித்த ஆறு பேர் எங்கே என்றனர் என்ற கேள்வி வேறு? அமெரிக்கா அரசாங்கத்திற்கு ஒரு செய்தி வருகிறது. தப்பித்த ஆறு பேர் உயிருடன் இருக்கின்றனர் என்றும் அவர்கள் வேறு நாடான கனடாவின் உதவியுடன் பத்திரமாக அதே ஊரில் உள்ளனர் என்றும் தெரிய வருகிறது. ஈரானின் இருக்கும் கனடா தூதரகத்தின் ஒரு தலைமை அதிகாரியின் வீட்டில் இருப்பார்கள். அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் ஒரு ஈரான் மக்களில் ஒருவர். இப்போது அமெரிக்கா அரசு அவர்களை காப்பற்ற என்ன செய்ய போகிறது? எப்படி 6 பேரும் தப்பித்து அமெரிக்கா திருப்பி வந்தனர். அவர்களுக்கு உதவி செய்தது யார்? இப்படி பல கேள்விகளுக்கு அற்புதமான திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர், கதையின் நாயகன்  மற்றும் தயாரிப்பாளர் Ben Affleck.


இக்கதை உண்மையில் நடந்தது என்பது தான் வியப்பூட்டிய விஷயம். திரைப்படம் ஆரம்பிக்கும் போதும் முடியும் போதும் அதற்க்கான ஆதாரங்களை திரையில் பார்க்க முடியும். சில விஷயங்கள் யோசிக்கவே முடியாத போது, அதே விஷயத்தை கண் முன் பார்க்கும் போது சில நேரத்தில் நம்பாமல் இருக்க முடியவில்லை.திரைகதை தான் இப்படத்தின் பலமே. சில நிகழ்ச்சிகள்  என்னை நுனி நாற்காலிக்கு கொண்டு வந்து விட்டது அதுவும் என்னை அறியாமல். விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி அவர்களை கேள்வி கேட்கும் நேரத்தை இதற்கு சொல்ல முடியும்அதேபோல் திரைக்கதை  நடக்கும் நேரம் 1979. அந்த நேரத்தில் இருந்த தொலைபேசி மற்றும் தந்தி முறைகளை அப்படியே காண முடிந்தது. ஈரான் மக்களின் கோபம், அக்காலத்தின் வீடு என்று சில நூணக்கமான விஷயங்களை காணலாம்


மொத்தத்தில் இப்படம் சிறந்த, தரமான திரைக்கதையுடன் அமைந்த ஒரு நிஜ சம்பவம்