Sunday, March 28, 2010

புது பயணம்...

வாழ்க்கை என்னும் இரயில் பயணத்தில் நாம் பல்வேறு வகையான மனிதர்களை சந்திக்கின்றோம். இதன் மூலமாக பல்வேறு புதுமையான வாழ்க்கை அனுபவத்தை கற்கிறோம் மற்றும் நல்ல நண்பர்களை பெறுகிறோம். அடுத்த கட்ட இரயில் பயணத்தின் போது காலத்தின் கட்டாயமாக பழகியவர்களை பிரியநேரிட்டு அதற்கு பதிலாக புது மனிதர்களை சந்திக்கின்றோம். அப்படி என்ன புது பயணம்? இது நாள் வரையில், அனைத்துக்கும் பணம் என்ற நிலையில் இருக்கும் சென்னையிலும், அவ்வபோது தென் இந்திய மாநிலங்கள் ஆன கேரளா, கர்நாடகம் மற்றும் தெலுகுதேசம் என்று சென்று இருந்தாலும், பல கோடி இந்திய மக்களின் கனவு நாடான அமெரிக்காவிற்கு எனது பயணம் ஆரம்பிக்கின்றது.

இந்நிலையில் கடந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்த தோழர்களை (முக்கியமாக சதீஷ், மாதவன், நாகூர், கிருஷ்ண மற்றும் பத்மன்) மறுபடியும் சிந்திப்போம் என்று தெரிந்தாலும், எப்போதும் என் மனதில் அவர்களுக்கு ஒரு இடம். அதே போல் என்னை வழியனுப்ப வந்த நண்பர்கள் பாலாசுப்பிரமணியன், சுந்தர், கார்த்திக் சந் அவர்களுக்கு நன்றி...


Air India

எனது பயணம் சென்னையில் ஆரம்பிக்கும் போது விமானநிலையத்தை பார்த்து ஆச்சரியப்பட்டது உண்மை தான். ஆனால் அது மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் காணமல் போனது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சென்னை, மும்பை போல் ஆகும் என்ற நம்பிக்கை எனக்குள் பலமாக இருந்தது (மும்பை பார்க்காமலே). ஆனால்  மும்பை விமானநிலையத்தை பார்த்த உடன் கண்டிப்பாக பல வருடங்கள் ஆகும் என்று தெரிந்துவிட்டது. மும்பையில் இருந்து என் விமானம் ஜெர்மன் நாட்டில் உள்ள பிரான்க்பெட்க்கு சென்றது. சில வருடங்களுக்கு முன்னால் ஜெர்மன் மொழியை கற்ற போகிறேன் என்ற பெயரில் இந்த மொழியை பற்றி அறிந்து வைத்து இருந்ததால் எனக்கு மனதில் சிறு மகிழ்ச்சி. ஆனால் அங்கு சோதனை என்ற பெயரில் செய்த மிக கேவலமான முறையை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்னையிலும், மும்பையிலும், அமெரிக்காவிலும் செய்த சோதனைகளை விட மோசமான சோதனை... அங்கு ஒரு முடிவு எடுத்தாகிவிட்டது அடுத்த எந்த ஒரு பயணத்திலும் கண்டிப்பாக ஜெர்மன் வழியாக பயணம் கூடாது என்பது தான்.

நான் அர்கன்சாஸ் என்னும் மாநிலத்திற்கு தான் செல்ல வேண்டும். எனது பயணம் ஒரு வழியாக அமெரிக்காவின் முக்கிய மாநிலமான சிக்காகோவிற்கு வந்தது. முதன் முதலில் வெள்ளை நிற மனிதர்கள் என்னை சுற்றிலும். என் மனதில்  2002ம் ஆண்டின் மதுரை பெரியார் பேருந்து நிலையம் வேகமாக வந்து நிற்கிறது. வாழ்க்கையின் ஓட்டத்தை பார்த்து பிரம்மித்து கொண்டு இருக்கும் வேளையில் அடுத்த ஆச்சிரியம். விமானத்தில் பறக்கும் போது எங்கும் ஒரே வெள்ளை நிறமாக தான் தெரிந்தது... நான் அர்கன்சாசில் விமானம் நின்ற பின்னும் ஒரே வெள்ளை நிறம். ஆம் அனைத்தும் பனி..முதல் முறையாக பனி படர்ந்து இருக்கும் இடத்தில் என்று என்னும் போது உடல் குளிரும் வேளையில், மனமும் குளிர்கிறது என்பது உண்மை தான்

அனுபவங்கள் மற்றும் பதிவுகள் புது உலகத்தில் இருந்து தொடரும்..

No comments: