Monday, April 12, 2010

பயணம் - 2

அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆடம்பரமாக மற்றும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பது நமது மக்களின் எண்ணம். நான் இந்தியாவில் இருக்கும் வரை எனது எண்ணமும் அது தான். ஆனால் இங்கு வந்த பின்பு தான் அதனுடைய நிதர்சனம் அறிய முடிகிறது மற்றும் தெரிகிறது. குறிப்பாக தனி நபராக வரும் நண்பர்கள் வாழ்க்கை ஒரு அமெரிக்க இயந்திரம் தான். (நம்மூர் இயந்திரம் அப்ப அப்ப ஓடாதே). வார நாட்கள் முழுவதும் வேலை, வேலை மற்றும் வேலை. அதனால் தான் கடந்த சில வாரங்களாக பதிவுகள் இல்லை. இங்கு உள்ள நம்மூர் மக்களிடம் பலபேரிடம் நல்ல அனுபவங்கள் கிடைத்தாலும், சில கிறுக்குத்தனமான மக்களை பார்த்தல் நம்பமுடியவில்லை. அப்படி பட்ட இரண்டு கே.பு.விடம் மாட்டி கொண்டு விழிக்கின்றேனே பாருங்கள்... என்னவென்று சொல்ல.

சரி, வேறு விஷயத்திற்கு வருவோம். நான் இங்கு உள்ள வால்-மார்ட் மற்றும் சம்ஸ் என்ற மார்க்கெட்க்கு சென்றேன் (அது தாங்க ரிலையன்ஸ் பிரெஷ் மற்றும் சரவணா ஸ்டோர் மாதிரி). அப்போது தான் இந்நாட்டின் நிலைமையை அறிந்து கொள்ள முடிந்தது. அங்கு பார்த்த பொருட்கள் அனைத்தும் சீனாவில் தாயரிக்கப்பட்டது. ஒன்று கூட அமெரிக்காவில் இல்லை. (காய்கறிகளை தவிர, அதுவும் மெக்சிகோவில் தாயரிக்கபட்டாத இருக்கும்). அமெரிக்காவிற்கு சீனா மற்றும் சில ஆசிய நாடுகள் பொருளாதார தடை விதித்தல் போதும், இந்நாட்டின் நிலைமை தலைகீழ் ஆகிவிடும் போல் உள்ளது.


நான் இருக்கும் ரோஜர்ஸ்
, அர்கன்சாஸ் மாவட்டத்தின் முடிவில் உள்ளது. அடுத்த மாவட்டம் மீசுரியின் ஆரம்பத்தில் பிரான்சன் என்ற இடத்தில் பலவகையான ஆடம்பரமான ஆடை மற்றும் அதற்கு சம்பந்தமான பொருட்கள் என்று கடைகள் இருந்தன. எனது இடத்தில் இருந்து அங்கு செல்ல இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இந்த பயணத்தின் சிறப்பு அம்சம்  என்னவென்றால் வழி அனைத்தும் மலைகளில் உள்ள குறுக்கான மற்றும் செங்குத்தான ஏற்ற மற்றும் இறக்கங்கள். ஒரு மணி நேரத்தில்லேயே லேசான தலை சுற்றல் வந்தது தான் மிச்சம். ஆனால் அங்கு சென்ற பின்பு தான் இந்நாட்டு மக்களின் செலவு செய்யும் மனப்பான்மை அறிய முடிந்தது. ஒரு காரில் ஆறு அல்லது எழு பேர் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். அமெரிக்க கறுப்பின மக்களும் இதில் அடங்குவர். எல்லா வகையான கடைகளிலும் ஓரத்தில் தள்ளுபடி என்ற பெயரில் விற்கப்படும் பொருட்கள் உண்டு. அதற்கு என ஒரு தனி இடமும் உண்டு. அந்த இடத்தில் சில மக்களை மட்டுமே காண முடிந்தது. அந்த சில மக்கள் அனைவரும் நம்மூர் மக்கள். இதே நிலைமை தான் அமெரிக்காவில் உள்ள எல்லா இடங்களிலும். நம்மூர் மக்களின் சேமிப்பு குணம் இதில் காண முடிந்தது.

அதே போல் பாட்டேவிள்ளே என்ற இடத்தில் (டிக்சன் தெரு) கல்லூரிகள் மற்றும் பலவகையான உணவகங்கள் இருப்பதால் ஒரே கூட்டமாக இருக்குமாம். வெள்ளிகிழமை இரவு அங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம்மூர் கல்லூரி மாணவர்கள் எப்படியோ அதே போல் அவர்களின் ஆட்டமும் பாட்டமும். அதை தவிர ஒரு நிகழ்ச்சியை காண முடிந்தது. தமிழ் சினிமாவில் மேடையில் ஒருவர் பாடி கொண்டு இருக்க, மற்றவர்கள் அதை ரசித்து கொண்டு இருப்பார்கள் (ல் வந்த மோகன் மற்றும் முரளி படங்களை பார்த்தல் தெரியும்).. இது சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று இருந்தேன். சென்னையில் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்ததே இல்லை. ஆனால் இந்நாட்டில் அப்படி பட்ட மேடை பாடகரை வைத்து கொண்டு மக்கள் (கல்லூரி மாணவர்கள் உட்பட) தங்கள் ரசனையை மகிழ்ச்சியுடன் பாடி  அவர்களுடன் பாடி கொண்டு வெளிபடுத்தினர். இப்போது தான் அமெரிக்கா வித்தியாசமாக தெரிய ஆரம்பிக்கிறது.

பயணம் தொடரும்..

No comments: