Friday, September 03, 2010

புன்னகை - சிறுகதை

குமார், நேரத்தை பார்க்கும் போது காலை மணி 8:30. இன்னும் ஒரு நாள் தான் இந்த அமெரிக்கா வாழ்க்கை. நாளைக்கு மதியம் விமானம் அதுவும் நேராக சென்னைக்கு. அமெரிக்காவிற்கு வந்து ஒரு வருடம் மற்றும் மூன்று மாதம் ஆகிறது. செய்த வேலை போதும் என்று நிறுவனம் சொன்னதால், வேலை பார்க்கும் கம்பெனி அவனை சென்னைக்கே வர சொல்லி விட்டது. குமாருக்கோ இந்த அமெரிக்கா வாழ்க்கையை விட, இன்னும் ஒரு வருடம் இருந்தால் ஓரளவு காசு பார்த்து இருக்கலாமே என்ற எண்ணம் மேல்லொங்கி இருந்தது. ஆனால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கண்டிப்பாக போய் தீர வேண்டும் என்ற கட்டாயம். குமார் வேலை செய்த இடத்தில் அவனையும் சேர்த்து பத்து பேர் வேலை செய்து கொண்டு இருந்தனர். அனைவரும் அவன் வயது ஒத்தவர்கள் மற்றும் யாருக்கும் கல்யாணம் ஆகவில்லை. அதனால் எப்போதுமே ஒரே ஆட்டம், பாட்டம் தான். 

கணேஷ், குமாரின் நெருங்கி நண்பன். இந்தியாவில் இருந்து வந்து ஆறு மாதம் ஆகிறது. ஆனால் என்ன காரணமோ இருவரும் சில வாரத்திலேயே நெருங்கி பழக ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே அமெரிக்காவில் வேலை பார்த்து இருந்த அனுபவம் இவனிடத்தில் இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து எல்லா இடத்திற்கும் சென்று வந்தனர். 

பத்து மணிக்கு கணேஷ், குமாரின் வீட்டிற்கு வர இரண்டு பேரும் பெரிய பெரிய கடைக்கு சென்று வீட்டிற்கு வாங்க வேண்டிய மீதம் உள்ள பொருட்களை வாங்கி கொண்டு மாலை ஏழு மணிக்கு பார்ட்டிக்கு வந்தனர். குமார் கொடுக்க போகும் பார்ட்டி. வேலை பார்க்கும் அனைத்து நண்பர்களும் வர, பார்ட்டி ஆரம்பம் ஆகி, இரவு பதினோரு மணி வரை சென்றது. குமார் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், மனதில் ஒரு சோகம் இருந்து கொண்டு தான் இருந்தது. 

அடுத்த நாள் காலையிலே குமாரின் வீட்டிற்கு அனைவரும் வர, மதிய நேரம் வரை பேசி கொண்டு இருந்து விட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். விமான நேரத்தில்  கணேஷ் தனியாக குமாரை அழைத்து, "நானும் இதற்கு முன்னால் அமெரிக்காவில் இருந்து உள்ளேன் உனக்கு தெரியும். என்னுடன் மொத்தம் இருவது பேர் வேலை பார்த்தனர். அதுவும் நான் கிளம்பியது சனிக்கிழமை தான். ஆனால் என்னை வழி அனுப்ப ஒருவரும் வரவில்லை. அந்த வேதனை உனக்கு தெரியாது.  நான் மட்டும் தனியாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு கிளம்பினேன். நானும் உன்னை போல் கவலை பட்டவன் தான். காசு பார்க்காமல் செல்கிறோமே என்று. ஆனால் அதுவல்ல நிஜம். மீண்டும் எனக்கு அமெரிக்கா வாய்ப்பு கிடைத்து வந்து விட்டேன். அதே போல் உனக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் உன்னை மதித்து, உன்னை வழியனுப்ப வந்த நண்பர்களை மறந்து, நீ சோகமாக இருப்பது தப்பு. காசு இன்னைக்கு வரும், நாளைக்கு போகும். அதனால் நண்பர்களை/உறவினர்களை/மனிதர்களை முதலில் நினை" என்று கூற, குமாரின் மனதிற்கு உண்மை என தோன்றி, முள்ளால் குத்தியது போல் இருந்தது. விமான சோதனை அறைக்கு செல்லும் முன் அனைத்து நண்பர்களையும் பார்த்து, முதல் முதலில் உண்மையான புன்னகை.

No comments: